தமிழக உள்மாவட்டங்களில் இன்று மழை... சென்னையில் மேகமூட்டம் - வானிலை மையம்
தமிழகத்தில் பல்வேறு உள்மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : கன்னியாகுமரி அருகே அரபிக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதில் தமிழகத்தின் சில பகுதிகள் இன்னும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், பொதுவாகவே மார்ச் மாதத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாவது கடினம். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பாக கன்னியாகுமரி அருகே அரபிக் கடல் பகுதியில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறியது.
இதன் காரணமாகவே தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 13ம் தேதி பலத்த மழை பெய்தது. அதன்பிறகு காற்றழுத்த தாழ்வுமண்டலம் வலு குறைந்தது. தற்சமயம் அரபிக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு இழந்து அங்கேயே மறைந்துவிட்டது.
ஆனால் கிழக்கு திசை காற்றில் ஏற்பட்ட வேகம் மற்றும் வேறுபாடு தென் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று சில இடங்களில் மழை பெய்யலாம். குறிப்பாக கிருஷ்ணகிரி, சேலம், வேலூர் ஆகிய உள் மாவட்டங்களில் மழை பெய்யு வாய்ப்பு உள்ளது. சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை தென்காசி 7 செ.மீ., ஆயிகுடி 6 செ.மீ., திருபுவனம்,கோவில்பட்டி தலா 5 செ.மீ., ஆண்டிப்பட்டி, செங்கோட்டை தலா 4 செ.மீ., துறையூர், பேச்சிப்பாறை, பெரம்பலூர், தளி தலா 3 செ.மீ., வத்திராயிருப்பு, ஊட்டி, கோத்தகிரி, பெரியகுளம், ஒகேனக்கல், சேத்தியாதோப்பு, கூடலூர் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.