”இதற்காகத்தான் திமுகவில் சேர்ந்துள்ளோம்” - காரணம் சொல்கிறார் மக்கள் தேமுதிக தலைவர் சந்திரகுமார்!
சென்னை: தேமுதிகவில் இருந்து பிரிந்து நாங்கள் ஆரம்பித்துள்ள ம.தே.மு.தி.க என்னும் மக்கள் தேமுதிகவிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவே திமுகவில் சேர்ந்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தேமுதிக, மக்கள் நலக்கூட்டணியில் சேர்ந்ததால் அதிருப்தி அடைந்த எம்எல்ஏ சந்திரகுமார், பார்த்திபன் உள்ளிட்ட அக்கட்சி மாவட்ட செயலாளர்கள் சிலர் விஜயகாந்த்திற்கு எதிராக வெளிவந்தனர்.
இதைத் தொடர்ந்து சந்திரகுமார், இரண்டு எம்எல்ஏக்கள் உள்பட 4 மாவட்டச் செயலாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனையடுத்து சந்திரகுமார் கடந்த 10 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் இணைந்தபின் செய்தியாளர்களிடம் பேசிய சந்திரகுமார், "சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் போட்டியிடும் எண்ணத்தில் திமுகவை ஆதரிக்கவில்லை. திமுகவுடன் மக்கள் தேமுதிக இணைந்து போட்டியிடுவதன் அவசியம் குறித்து ஸ்டாலினுடன் பேசினோம். தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக கருணாநிதியிடம் பேசி தெரிவிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்கள் தேமுதிகவிற்கு அங்கீகாரம் வேண்டும் என்பதாலேயே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளோம். விஜயகாந்தை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சியின் செயல்பாடுகளை கொண்டே தேமுதிக யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என தெரிந்து கொள்ளுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.