தேமுதிக கரை வேட்டிக்கு காப்பிரைட்டா வாங்கி வச்சிருக்கீங்க?.. சந்திரகுமார் கேள்வி
சென்னை: தேமுதிக கரை வேட்டியைக் கட்டக் கூடாது என்று சொல்ல தேமுதிகவுக்கு அதிகாரம் இல்லை. வேட்டிக்கு அவர்கள் என்ன காப்புரிமையா வாங்கி வைத்துள்ளனர் என்று மக்கள் தேமுதிக தலைவர் வி.சி.சந்திரகுமார் கேட்டுளளார்.
தேமுதிக, திமுகவுடன் கூட்டணி வைக்காத அதிருப்தியில் அங்கிருந்து வி.சி. சந்திரகுமார் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்கள் உள்பட 10 பேர் வெளியேறினர். அவர்கள் மக்கள் தேமுதிக என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தேமுதிக வக்கீல் அணி ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்தது. அதன்படி, தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் விஜயகாந்தின் படத்தை பயன்படுத்தக்கூடாது. தேமுதிக கொடி, தேமுதிக கரை வேட்டியை பயன்படுத்தக்கூடாது எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வி.சி.சந்தரகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், நாங்கள் விஜயகாந்த் படத்தையோ, தேமுதிக கொடியையோ பயன்படுத்தவில்லை. தேமுதிக கரை வேட்டியை கட்டும் முடிவில் இருந்து மாறப் போவதில்லை. கரைவேட்டிக்கு தேமுதிக காப்புரிமை ஏதேனும் பெற்றிருக்கிறதா என்று அவர் கேட்டுள்ளார்.