ஜெயலலிதாவை சிரிக்க வைத்து சீட் வாங்கிய ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை நேர்காணலின் போது சிரிக்க வைத்த சந்திரபிரபாவுக்கு விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனி தொகுதியில் சீட் கிடைத்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 2 தொகுதிகளில் சிட் எம்.எல்.ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அமைச்சர்களின் ஆதரவாளர்களுக்கே சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
'இருக்கும் வரை காற்று...புறப்பட்டால் புயல்தான்' இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஜெயலலிதாவிற்கு நிச்சயம் பொருந்தும். சட்டசபைத் தேர்தல் அறிவித்த பின்னரும் ஆளும் அதிமுக தரப்பு அமைதியாக இருக்கிறதே என்று ஆள் ஆளுக்கு பேச... மார்ச் 6ம் தேதி திடீரென நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா.
கூட்டணி யாருடன் என்று கூறாமலேயே குட்டிக் கட்சித்தலைவர்களை சந்தித்துப் பேசினார். கூட்டணியை விட்டு வெளியே போன சரத்குமாரையும் திடீரென வரவழைத்துப் பேசினார். மார்ச் 21ம் தேதியில் இருந்து நேர்காணலை நடத்தி முடித்து 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டு உடனடியாக சூறாவளி சுற்றுப்பயணத்திற்கான தேதிகளையும் அறிவித்து விட்டார் ஜெயலலிதா.
அதிமுக வேட்பாளர் பட்டியலில் பத்து அமைச்சர்களுக்கு கல்தா. நூற்றுக்கும் மேற்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏக்களுக்கு சீட் மறுப்பு என அரசியல் களத்தில் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது அதிமுக வேட்பாளர் பட்டியல்
ஸ்ரீவில்லிபுத்தூர் சந்திரபிரபா
நேற்று வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி வேட்பாளராக சந்திர பிரபா அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவர் பண்டிதன்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவியான இவர் 'சீட்' வாங்கிய விதம் ருசிகரமானது.
காலில் விழுந்து சரணாகதி
'ஸ்ரீவில்லிபுத்தூர் தனி தொகுதிக்கு போயஸ்கார்டனில் நேர்காணல் நடந்தபோது, மாவட்ட கவுன்சிலரான முத்தையாவின் மனைவி சந்திர பிரபாவுக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது. அதன்படி போயஸ்கார்டன் சென்ற சந்திர பிரபா, முதல்வர் ஜெயலலிதா இருந்த அறைக்குள் சென்ற உடன் டமால் என்று நெடுஞ்சாண் கிடையாக காலில் விழுந்தார்.
காவல் தெய்வம்
எழுந்த பின்னரும் குனிந்து கொண்டே ஒரு ஓரமாக நின்றுள்ளார். சந்திர பிரபா நின்று கொண்டிருந்ததை பார்த்த ஜெயலலிதா அவரை இருக்கையில் அமர சொல்லியிருக்கிறார். ஆனால் சந்திர பிரபா இல்லம்மா என்று கூறி நின்று கொண்டிருந்தார். திடீரென மேடையில் பேசுவதை போல் 'தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வம்' என முழங்க ஆரம்பித்தார்.
சிரித்த ஜெயலலிதா
மனப்பாடம் செய்தது போல் சந்திர பிரபா கூறியதை கேட்ட ஜெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தாராம். பின்னர் ஜெயலலிதாவே போதும்மா, போதும் இது பொதுக்கூட்ட மேடையில்லை, முதல்ல உட்காருங்க என்று சொன்ன பிறகு தான் இருக்கையில் அமர்ந்தாராம் சந்திர பிரபா.
ஆல் த பெஸ்ட்
பின்னர் என்ன படிச்சிருக்கீங்க என்று ஜெயலலிதா கேட்க, தமிழில் ஆராய்ச்சி பட்டம் என்று சந்திர பிரபா கூறியிருக்கிறார். இதைக்கேட்ட ஜெயலலிதா, 'அப்படியா...? உங்கள் செய்கை ஏதோ பொதுக்கூட்டத்தில் பேசுறது மாதிரி இருந்தது' என்றதோடு, சிரித்து விட்டு 'ஆல்த பெஸ்ட்...!' என்று கூறி அனுப்பினாராம்.
சிரிக்க வைத்து சீட்
நேற்று வெளியான அதிமுக வேட்பாளர் பட்டியலில் சந்திர பிரபாவுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்துள்ளார் ஜெயலலிதா. அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் தனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் சந்திரபிரபா. கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுத்து சீட் வாங்குபவர்கள் பலர் இருக்க இம்முறை ஜெயலலிதாவின் நேரடி பார்வையில் நடந்த நேர்காணலில் கட்சித்தலைவியை சிரிக்க வைத்து சீட் வாங்கியிருக்கிறார்.
கே.டி.ராஜேந்திரபாலாஜி
விருதுநகர் மாவட்டத்தில் ஏழு சட்டசபை தொகுதிகளில் ஆறு தொகுதிகளில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளர்களே வில் சீட் பெற்றுள்ளனர். மாவட்டத்தில் ஏழு தொகுதிகளில் சிவகாசியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கும் சீட் கிடைத்துள்ளது.
அமைச்சர்களின் ஆதரவாளர்கள்
அமைச்சர்களின் ஆதரவாளர்களான எஸ்.ஜி.சுப்பிரமணியன் சாத்துார்,ஏ.ஏ.எஸ்.ஷியாம் ராஜபாளையம், சந்திரபிரபா ஸ்ரீவில்லிபுத்துார், கலாநிதி விருதுநகர், எம்.ஜி.முத்துராஜா அருப்புக்கோட்டை , திருச்சுழிக்கு கே.தினேஷ் பாபு வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
திருச்சுழி
ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி அமைச்சர்களாக இருந்ததால் இருவர்களின் ஆதரவாளர்களும் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இதில் திருச்சுழி தொகுதியில் கே.தினேஷை தவிர மற்றவர்கள் அனைவரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள்.
தொகுதி மாறிய எம்.எல்.ஏக்கள்
சாத்துார் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏவான அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கும், விருதுநகர் தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவான மாஃபா பாண்டியராஜன் ஆவடி தொகுதிக்கும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வைகை செல்வனுக்கு நோ சீட்
அருப்புக்கோட்டை தொகுதியின் சிட்டிங் எம்.எல்.ஏவான வைகை செல்வன், ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த சிட் எம்.எல்.ஏவான கோபால்சாமி ஆகிய இருவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை