ஜெயலலிதா சிலையை மாற்றுவதற்கு முன்னால், அமைச்சர்களை மாற்றனும்.. டி. ராஜேந்தர் ஆவேசம்
Recommended Video
திருச்சி: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் செய்யும் முன்னால், அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்று லட்சிய தி.மு.க கட்சியின் தலைவரும், நடிகருமான, டி.ராஜேந்தர் காட்டமாக தெரிவித்தார்.
லட்சிய தி.முக. தலைவர் டி.ராஜேந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வரும் 28ம் தேதி, எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான முடிவை அறிவிக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், திருச்சியில் டி.ராஜேந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:
வந்து பார்க்கட்டும்
ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அவரவருக்கு ஆயிரம் கனவுகள் உள்ளது. அதனால்தான், இந்த அரசியல் வரவு உள்ளது. இதனால் ஏற்படும் விளைவுகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அரசியல் என்பது சாதாரண விஷயமல்ல. அது மிகவும் கஷ்டமானது. அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா சிலையை மாற்றுவதற்கு முன்பாக, அவருக்கு இப்படி ஒரு சிலையை அமைத்த இந்த ஆட்சியில் உள்ள அமைச்சர்கள் நிலையை மாற்ற வேண்டும்.
பினாமி ஆட்சி
ஜெயலலிதாவின் உருவம், உள்ளம், கம்பீரத்தை மறந்து அமைக்கப்பட்டுள்ள அந்த சிலையை பார்க்கவே வேதனையாக உள்ளது. இதை வைத்து பார்த்தாலே, தற்போது நடப்பது 'அம்மா ஆட்சி' இல்லை என்பது தெரிகிறது. இரட்டை இலை இருந்தும் ஆர்.கே.நகரில் தோல்வியடைந்தது இந்த ஆட்சியாளர்களால்தான். ஜெயலலிதா உருவாக்கி தந்த ஆட்சி தற்போது பினாமி ஆட்சியாக நடந்து வருகிறது. காவிரி பிரச்சனைக்காக நடத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திற்கு எனது லட்சிய தி.மு.க.விற்கு அழைப்பில்லை. கருணாநிதி, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அனைத்து கட்சி கூட்டங்களில் லட்சிய தி.மு.க. பங்கேற்றது.
எனது ஆதரவு இல்லை
ஆனால் ஆர்.கே.நகர் பிரசாரத்திற்கு நான் செல்லவில்லை என்பதற்காக எனக்கு அழைப்புவிடுக்கப்படவில்லை. மக்களுக்கே இந்த ஆட்சி மீது நம்பிக்கையில்லை. இவர்கள் நடத்திய அனைத்து கட்சி கூட்டத்தால் எந்த பயனும் இல்லை. மற்றவர்களுக்கு பல்லாக்கு தூக்கும் இந்த ஆட்சிக்கு நான் எப்படிங்க ஆதரவு கொடுக்க முடியும் என்றார்.
ஸ்ரீதேவிக்கு அஞ்சலி
மேலும், தமிழகத்தில் உதித்து இந்தியா முழுவதும் மின்னிய நடிகை ஸ்ரீதேவி மரணம் இந்திய திரையுலகிற்கே பேரிழப்பாகும். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.