காலியாகும் அதிகாரிகள் பணியிடம்.. பள்ளி பொது தேர்வு திட்டமிட்டப்படி நடக்குமா..
பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் பணியிடம் காலியாகி இருப்பதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என தெரிகிறது.
நெல்லை: பொது தேர்வு தொடங்க உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் பணியிடம் காலியாகி இருப்பதால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என தெரிகிறது.
நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு பொது தேர்வுகள் வரும் 1ம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்ட கல்வி அதிகாரி ஜெயபாண்டி ஓய்வு பெற்றார். அவருக்கு பதிலாக நிரந்த டிஇஓ நியமிக்கப்படவில்லை.
இதனை பொறுப்பு டிஇஓவாக தலைமை ஆசிரியர் சின்னத்துரை என்பவர் கவனித்து வருகிறார். இது போல் தென்காசி கல்வி மாவட்ட அதிகாரி வருகிற மார்ச்சில் ஓய்வு பெறுகிறார்.
இது போல் நெல்லை மாவட்ட கல்வி அதிகாரி முகந்தன் மார்ச் இறுதியில் ஓய்வு பெறுகிறார். இது போல் குமரி மாவட்டத்தில் ஏற்கனவே தக்கலை டிஇஓ பணியிடம் காலியாக இருக்கிறது. நாகர்கோவில் டிஇஓ மார்ச்சில் ஓய்வு பெறுகிறார்.
இதுபோல் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் டிஇஓ பணியிடங்கள் காலியாக கிடக்கின்றன. தேர்வுகள் தொடங்கி முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கிவிடும்.
ஒவ்வொரு குறிப்பிட்ட மையத்திற்கும் அந்தந்த மாவட்ட கல்வி அலுவலரே கடைசி வரை பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அதற்கு முன்னரே கல்வி அலுவலர்கள் ஓய்வு பெற இருப்பதால் பணிகள் கவனிக்க போவது யார் என்று கேள்வி குறி எழுந்துள்ளது.