கிரானைட் முறைகேடு வழக்கு.. ரூ.208.20 கோடி நஷ்டம்.. மேலும் 2,743 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கிரானைட் முறைகேடு வழக்கில் பிஆர்பி உள்ளிட்ட நிறுவனங்கள் மீது மேலும் 2,743 பக்க குற்றப்பத்திரிகை மேலூர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கில் பிஆர்பி உள்ளிட்ட நிறுவனங்கள் மீது மேலும் 2,743 பக்க குற்றப்பத்திரிகை மேலூர் நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதால், அரசுக்கு ரூ. 208.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் முறைகேடு நடந்ததாக ஐ.ஏ.எஸ், அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலூர் பகுதிகளில் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்ததாகவும், அரசு நிலங்களில் அனுமதியின்றி கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததாகவும் பி.ஆர்.பி. உள்ளிட்ட பல கிரானைட் நிறுவனங்கள் மீது மதுரை மாவட்ட ஆட்சியர்களாக இருந்த சுப்பிரமணியன், அன்சுல் மிஸ்ரா ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகின்றன.
ஒவ்வொரு வழக்குகளிலும் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிஆர்பி கிரானைட் நிறுவனம் மீதான 2 ஆயிரத்து 933 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பி.ஆர்.பி. நிறுவனம் சட்ட விரோதமாக கிரானைட் கற்களை வெட்டி எடுத்தது மற்றும் அனுமதியின்றி அரசு நிலங்களில் கிரானைட் கற்களை அடுக்கி வைத்ததன் காரணமாக அரசுக்கு மொத்தம் ரூ. 890 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் கிரானைட் மோசடி தொடர்பாக மேலூர் மாஜீஸ்திரேட் கோர்ட்டில் இன்று மேலும் ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பி.ஆர்.பி., உள்ளிட்ட பல நிறுவனத்தின் மீது தாக்கல் செய்யப்பட்ட 2,743 பக்க குற்றப்பத்திரிகையில் அரசுக்கு ரூ.208.20 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.