கரூர், மதுரையில் கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கியது கோர்ட்!
கரூர் மற்றும் மதுரையில் கைதுசெய்யப்பட்ட மாவோயிஸ்ட்களுக்கு குற்றப்பத்திரிக்கை நகலை நீதிமன்றம் வழங்கியது.
Recommended Video
கரூர் : கடந்த 2016ம் ஆண்டு கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தவர்களுக்கு குற்றப்பத்திரிக்கையை கரூர் முதன்மை நீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டு உள்ளது.
கரூரை அடுத்த வெங்கமேடு கணக்குபிள்ளை தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர்கள் மணிவாசகம் மனைவி கலா (எ) ஜானகி , இதேபோல் சுந்தரமூர்த்தி மனைவி சந்திரா இவர்கள் இருவரும் கரூர் பகுதியில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றிக் கொண்டே மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
இத்தகவலை உறுதி செய்த கியூபிராஞ்ச் தனிப்படையினர் கடந்த 2016ம் ஆண்டு ஜூலை 22ம் தேதி இரவு கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
இவர்களுடன் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முருகன் தொடர்பில் இருந்ததை உறுதி செய்த கியூபிராஞ்ச் தனிப்படையினர் கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி முக்கிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றி அவரையும் சிறையில் அடைத்தனர்.
மேலும் கடந்த ஆண்டு இவர்கள் மீதான குற்றபதிவுகளை கியூபிராஞ்ச் தனிப்படையினர் தாக்கல் செய்தனர். இந்நிலையில் ,தான் நடத்தி வந்த வழக்குகளை நடத்த முடியாமல் உள்ளதை காரணம் காட்டி இவ்வழக்கில் சிக்கிய மதுரை வழக்கறிஞர் முருகன் மனுத்தாக்கல் செய்தார்.
ஏறக்குறைய கைது செய்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் விசாரணை நடத்தபடவில்லை என்ற காரணத்தைக் கூறி ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மூவரும் பலமுறை முறையிட்டு உள்ளார்.
ஆனாலும் இவர்களது ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் கரூர் முதன்மை நீதிமன்றத்தில் நடுவர் நம்பிராஜன் முன்னிலையில் மூவரையும் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர்கள் மூவருக்கும் குற்றபத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.