அமாவாசையில் பிரசாரத்தை தொடங்கிய சாருபாலா தொண்டைமான்!
புதுக்கோட்டை: திருச்சி லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான சாருபாலா தொண்டைமான், அமாவாசை நேரத்தில் தனது பிரசாரத்தை தொடங்கியதோடு, மக்கள் குறைகளை உடனுக்குடன் போக்கிய மன்னர் குடும்பத்தில் பிறந்தவள் என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
திருச்சி லோக்சபா தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் ஞாயிறன்று புதுக்கோட்டையில் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
கூட்டத்திற்கு வரும் முன்பே பிரகதாம்பாள் கோவிலில் சாமி தரிசனம் முடித்த அவர், அமாவாசை என்பதால் கோவில்பட்டி எனும் இடத்தில் பிரசாரம் தொடங்கினார்.
இதையடுத்து லேணா மண்டபத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசும் போது, இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து விடப்பட்டதாக சொல்கிறார்கள். அது தவறு. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் எழுச்சியுடன் தேர்தல் வேலை செய்ய கிடைத்த ஒரு அற்புதமான வாய்ப்பு இது. இளம் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்க இது தான் நமக்கு நல்ல வாய்ப்பு.
இதை எல்லோரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த தேர்தலில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க வேண்டியதாகி விட்டது. அந்த தேர்தலில் ஜெயித்த எம்.பி. குமார் இதுவரை இந்த தொகுதிப்பக்கம் வந்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா. அவர் வரவும் இல்லை. எதுவும் செய்யவும் இல்லை.
நான் மக்கள் குறைகளை உடனுக்குடன் போக்கிய மன்னர் குடும்பத்தில் பிறந்தவள். இப்போதும் இந்த தொகுதியில் இருக்கும் முக்கிய பிரச்னைகளான புதுக்கோட்டை திருச்சி ரயில் பாதையில் மேம்பாலம், சென்னை ஐ.ஐ.டி மாதிரியான பொறியியல் கல்லூரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு இணையான மருத்துவ கல்வி ஆராய்ச்சி நிலையம் அனைத்தையும் கொண்டு வருவேன் என்று கூறினார்.