பிரஸ் மீட்டிலேயே அப்ரூவரான முன்னாள் கமிஷனர் ஜார்ஜ்.. அரசுக்கு வைத்த அந்த செக்.. பின்னணி என்ன?
குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் அளித்த பேட்டி தமிழக அரசை கதி கலங்க வைத்துள்ளது.
சென்னை: குட்கா ஊழல் தொடர்பாக முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் அளித்த பேட்டி தமிழக அரசை கதி கலங்க வைத்துள்ளது.
குட்கா ஊழல் உண்மைதான் என்று சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் பேட்டி அளித்துள்ளார்.குட்கா ஊழல் தொடர்பாக இரண்டு நாள் முன் தமிழகத்தில் சிபிஐ திடீர் என்று ரெய்டு நடத்தியது. குட்கா விவகாரம் வெடித்துள்ள நிலையில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
குட்கா ஊழல் குறித்த சிபிஐ சோதனை தொடர்பாக ஜார்ஜ் விளக்கம் அளித்தார். மதுரை நீதிமன்றம் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது என்று நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி ஜார்ஜ் பேட்டி அளித்தார்.
மறைந்து வந்தது அதிமுக
நேற்று காலை வரை அதிமுக சார்பில் பேசிய எல்லோருமே இந்த ஊழல் நடக்கவில்லை என்றுதான் கூறினார்கள். அதாவது அமைச்சர் விஜயகுமார் மீது குற்றச்சாட்டு வைத்தாலே அவர் குற்றம் செய்தவர் என்று ஆகிவிடுமா என்று கோபமாக குற்றச்சாட்டை மறுத்தனர். முக்கியமாக விஜயபாஸ்கர் மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று பொன்மொழி எல்லாம் கூறினார்.
ஜார்ஜ் அளித்த பேட்டி
ஆனால் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் தனது பேட்டியில், ஆம் குட்கா ஊழல் நடந்தது உண்மைதான். குட்காவை வைத்து முறைகேடு நடந்து இருக்கிறது. இதில் பணம் கைமாறி இருக்கிறது. இதுகுறித்து நான் கொடுத்த புகார்களை விசாரிக்கவில்லை. அரசுக்கு இதுகுறித்து அறிக்கையும் அளித்தேன். ஊழல் நடந்தது உண்மைதான். ஆனால் யாருக்கு பணம் சென்றது என்று தெரியாது. அதை சிபிஐதான் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.
எப்படி சமாளிப்பது
இதனால் தற்போது குட்கா ஊழல் நடந்தது உண்மைதான் என்று தெரிய வந்துள்ளது. இதனால் அரசு இனிமேல் ஊழல் நடக்கவில்லை என்று கூறமுடியாது. ஏனென்றால் அரசு கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் துறையின் முன்னாள் ஆணையரே, குட்கா ஊழல் புகாரை முதலில் விசாரிக்க சொன்ன அதிகாரியே ஊழல் நடந்தது உண்மைதான் என்று கூறிவிட்டார். இதனால் இனியும் மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்று அதிமுகவினரால் பேச முடியாது.
செக் 2
அதற்கு அடுத்தபடியாக, அரசை விசாரணை நடத்த சொல்லுங்கள், நான் வருகிறேன். என் மீது சந்தேகம் இருந்தால் விசாரணை நடத்தட்டும். சிபிஐ உட்பட எந்த விசாரணை அமைப்பு வேண்டுமானாலும் விசாரிக்கட்டும் என்று ஜார்ஜ் சவால் விடுத்து இருக்கிறார். இதனால் சிபிஐ விசாரணை நடத்தும் பட்சத்தில் அவர் அப்ரூவர் ஆக வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள் சில சட்ட வல்லுநர்கள். இது அரசுக்கு அடுத்த செக்காக அமையும்.
மிக முக்கியம்
அவர் ஏற்கனவே இந்த பேட்டியில் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்ட சில அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதேபோல் அரசு தன்னுடைய அறிக்கையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதனால் விசாரணையில் அவர் சில உண்மைகளை கூறுவார் என்று கூறப்படுகிறது. இதனால் சிலர் கைதாக வாய்ப்புள்ளது . இது அரசுக்கு பெரிய செக்காகவும், இறுதி செக்காகவும் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.