வால்பாறையில் பரபரப்பு.. சிறுமியை தூக்கி செல்ல முயன்ற சிறுத்தை.. விரட்டியடித்த பொதுமக்கள்!
சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கி செல்ல முயன்றது.
கோவை: வால்பாறையில் வீட்டிற்குள் புகுந்து 10 வயது சிறுமியை சிறுத்தை ஒன்று தூக்கி செல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள எஸ்டேட் பகுதி பெரியகல்லாரு. இங்கு நேற்று திடீரென தேயிலை தோட்டத்திலிருந்து பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் சிறுத்தை ஒன்று புகுந்தது.
தேயிலை தோட்ட தொழிலாளி வீட்டிற்குள் புகுந்து அந்த சிறுத்தை அங்கிருந்த சத்யா என்ற 10 வயது சிறுமியை தாக்கியது. மேலும் சிறுமியை இழுத்து செல்லவும் சிறுத்தை முயன்றுள்ளது.
அப்போது சிறுமியின் அலறல் கேட்டு வந்த அங்கு வந்த சிறுமியின் தாய், பயந்து கூச்சலிட்டார். இதனால் அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர் கட்டை ஒன்றினால் சிறுத்தையை தாக்கினர். அத்துடன் வீட்டினுள் இருந்து விரட்ட கடுமையாக போராடினர். இதனை அடுத்து சிறுத்தை விரட்டியடிக்கப்பட்டது.
பின்னர் கழுத்தில் சிறுத்தை தாக்கி படுகாயமடைந்த சிறுமி வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாள். இதையடுத்து அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.