செம்பரம்பாக்கம் ஏரி வலுவாக உள்ளது; பொது மக்கள் பீதி அடைய வேண்டாம்: போலீசார் விளக்கம் !
சென்னை: செம்பரப்பாக்கம் ஏரி உடைந்துவிட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல என்றும் ஏரி வலுவாக இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இதனால் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் விளக்கம் அளித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழைக்கு செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியது. இதையடுத்து அவ்வப்போது ஏரியின் பாதுகாப்பு கருதி தொடந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்த நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததாக சிலர் வதந்தியை கிளப்பினர். இதனால் பொது மக்கள் பீதியில் உறைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி கதறியழுதபடி செல்ல துவங்கினர். தங்களது பிள்ளைகள் என்ன ஆனதோ? தேடி அலைந்து அசோக்நகர் பகுதி சாலைகளில் கதறித்துடித்தபடி பெற்றோர் பதறி ஓடிய காட்சி நெஞ்சை அதிர வைத்தது.
இதையடுத்து செம்பரம்பாக்கம் ஏரி உடைந்ததாக கிளம்பிய வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என போலீசார் கூறியுள்ளனர். கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
செம்பரம்பாக்கத்தில் இருந்து தற்போது வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு 3,500 கன அடியாக குறைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. காற்றுடன் கனமழை பெய்து வருவதால் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மழை காரணமாக சாலையில் மழைநீர் வெள்ளமாக பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். தொடரும் மழையால் செம்பரம்பாக்கம் ஏரியை மீண்டும் திறந்துவிடுவார்களோ? என சென்னைவாசிகள் பெரும் அச்சத்தில் உறைந்தும் போயுள்ளனர்.