தனியார் பாக்கெட் பாலில் ரசாயனம்.. ஆவின்தான் ஆரோக்கியமானது.. அள்ளிவிட்ட அமைச்சருக்கு சிக்கல்!
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பாலில் ரசாயணம் கலக்கப்படுவதாக கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்: தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பேச்சுக்கு பால் முகவர்கள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சசிகலாவின் அரசியல் பிரவேசத்துக்குப் பிறகு அவரது தீவிர ஆதரவாளராக உள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சசிகலாவின் போஸ்டரை கிழத்த தீபாவின் ஆதரவாளர் ஒருவரை அடித்து துவைத்தார்.
இதையடுத்து ஆட்சியமைத்த சசிகலா ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புதிய ஆட்சியமைந்தது. அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு பால்வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
தாய்ப்பாலுக்கு நிகரானது
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் புதிய பால் பண்ணை கட்டடத்தை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் ஆவின் பால் தாய்ப்பாலுக்கு நிகரானது என்றார்.
தனியார் பாலில் ரசாயனம்
மற்ற தனியார் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். தனியார் பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போகாமல் இருக்க அவற்றில் ரசாயனம் கலக்கப்படுவதாக ராஜேந்திர பாலாஜி கூறினார்.
ஆவின் தான் ஆரோக்கியமானது
ஆவின் மட்டுமே ஆரோக்கியமான பால் என்ற அவர், ஆவின் பாலை குடித்தால் கை, கால் வலி வராது, கை, கால்களை இஷ்டம் போல் நீட்டலாம் மடக்கலாம் என அள்ளிவிட்டார். அமைச்சரின் இந்த பேச்சால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம்
அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பால் முகவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனியால் பாலை தூற்றும் அமைச்சர் ஏன் இதுவரை தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.