ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த்துக்கு மரண தண்டனை: மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தமிழகத்தை அதிர வைத்த சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தை அதிர வைத்த சென்னை சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்த செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் தஷ்வந்த். மென்பொறியாளரான இவர் மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பக்கத்து வீட்டை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு அவரை கொன்று உடலை எரித்தார் தஷ்வந்த்.
சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இந்த வழக்கில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
தாயையும் கொன்ற தஷ்வந்த்
ஜாமீனில் வெளியே வந்த தஷ்வந்த் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி தனது தாய் சரளாவையும் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை பறித்துக்கொண்டு தப்பினார். மும்பை அந்தேரி பகுதியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மும்பை போலீஸ் உதவியுடன்
ஆனால் போலீஸ் பிடியில் இருந்து தப்பினான் தஷ்வந்த். பின்னர் மும்பை போலீஸ் உதவியுடன் தஷ்வந்தை பிடித்த போலீசார், அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
தஷ்வந்துக்கு பிடிவாரண்ட்
ஹாசினி கொலை வழக்கு விசாரணையின் போது செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருந்த தஷ்வந்துக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தஷ்வந்தை தொடர்ந்து செங்கல்பட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி வந்தனர்.
தஷ்வந்த் மீது தாக்குதல்
நீதிபதியிடம் தனக்கு தண்டனை வழங்குமாறு ஒருமுறை கெஞ்சிய தஷ்வந்த் மறுமுறை தான் யாரையும் கொலை செய்யவில்லை என்றார். நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்பட்ட தஷ்வந்த் மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டன.
தஷ்வந்த் குற்றவாளி என தீர்ப்பு
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு நீதீமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தது. இதனை முன்னிட்டு கொலையாளி தஷ்வந்த் 11.40 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் பிற்பகல் 3 மணிக்கு தீர்ப்பு வழங்கிய செங்கல்பட்டு நீதிமன்றம் தஷ்வந்த் குற்றவாளி என உறுதி செய்தது.
குறைந்தபட்ச தண்டனை
தஷ்வந்துக்கு அதிகபட்சமாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஹாசினியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அப்போது தமக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என தஷ்வந்த் வேண்டுகோள் விடுத்தார்.
குற்றங்கள் நிரூபணம்
தஷ்வந்த் மீது ஆள்கடத்தல், பலாத்காரம், கொலை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார். இதன்மூலம் தஷ்வந்துதான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி வேல்முருகன் தெரிவித்தார்.
தஷ்வந்திற்கு தூக்கு தண்டனை
இதனைத்தொடர்ந்து மாலை 4.40 மணியளவில் தஷ்வந்திற்கு மரண தண்டனை விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். மேலும் தஷ்வந்திற்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார் நீதிபதி வேல்முருகன்.
நீதியரசர் வேல்முருகன் வாழ்க
தஷ்வந்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதும் சிறுமி ஹாசினியின் தந்தை பாபு கண்ணீர்விட்டு கதறினார். நீதிமன்ற வளாகத்தில் நீதியரசர் வேல்முருகன் வாழ்க என அங்கு திரண்டிருந்தோர் முழக்கமிட்டனர்.