செங்கல்பட்டு ஷாக்.. அறுவடை கூலி தராததால் ஆத்திரம்.. டிராக்டரை மேலே ஏற்றி விவசாயி கொலை
செங்கல்பட்டு: அறுவடை கூலி 3,500 ரூபாய் தராததால் ஆத்திரத்தில் டிராக்டரை மேலே ஏற்றி விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விவசாயியை கொன்ற கொலையாளி மறைமலைநகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள் கோவில் அடுத்த கொண்டமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜகோபால் (வயது-49) என்பவர் விவசாயம் செய்து வந்தார்.
10 நாட்களுக்கு முன்பு ராஜகோபால் நிலத்தில் அதேபகுதியை சேர்ந்த பெருமாள் என்பவர் அறுவடை இயந்திரம் மூலம் நெல்பயிரை அறுவடை செய்திருக்கிறார்.
ராஜகோபால் மிரட்டல்
இதில் பெருமாளுக்கு அறுவடை கூலியாக ராஜகோபால் தர வேண்டிய 3500-ரூபாயை தர தாமதித்து வந்ததால் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை ராஜகோபாலின் வீட்டுக்கு வந்த பெருமாள் இன்றைக்குள் பணம் தரவில்லையென்றால் உன்னுடைய ட்ரில்லர் மிஷினை தூக்கி விடுவேன் என மிரட்டல் தொனியில் பேசிவிட்டு சென்றாராம்.
ட்ரில்லர் மிஷன்
இதற்கிடையில் நேற்று வயலில் உள்ள தனது ட்ரில்லர் மிஷினை எடுப்பதற்காக வயலுக்கு சென்ற போது அவருக்கு முன்னதாகவே பெருமாள் ட்ரில்லர் மிஷினை தனது ட்ராக்டர் மூலம் எடுத்து செல்வதை கண்ட ராஜகோபால் தனது இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து சென்று பெருமாளிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்.
ராஜகோபால் உயிரிழப்பு
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றிபோய் ஆத்திரமடைந்த பெருமாள் ராஜகோபாலை கீழே தள்ளி அவர்மீது தனது ட்ராக்டரை ஏற்றி கொலை செய்துள்ளனர். ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொலை செய்த பெருமாள் டிராக்டரை வீட்டில் விட்டு விட்டு சில மணிநேரம் கழித்து மறைமலைநகர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
போலீசார் விசாரணை
சம்பவம் குறித்து அறிந்த மறைமலைநகர் காவல் ஆய்வாளர் நந்தகோபால் காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். போலீஸ் வாகனம் செல்வதை கண்ட ஊர் மக்கள் பின் தொடர்ந்து சென்ற போதுதான் கொலை நடந்திருப்பதும் கொலை செய்யப்பட்டவர் ராஜகோபால் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சரணடைந்த பெருமாளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 3.500 ரூபாய்க்காக விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.