செங்கம் போலீஸ் தாக்குதல் சம்பவம்... சென்னை ஹைகோர்டில் பாதிக்கப்பட்ட ராஜா வழக்கு
சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் தமது குடும்பத்தை தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் தோக்கவாடியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் ராஜா(38). அவரது மனைவி உஷா(35). மகன் சூர்யா(18). இவர்கள் மூன்று பேரும் நகை வாங்குவதற்காக செங்கம் பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள நகை கடைக்கு சென்றிருந்தனர். அப்போது நகை வாங்குவது குறித்து கணவன் மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இருவரும் நகைக்கடை வெளியே வாய்த்தகராறில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற போலீஸார் நம்வாழ்வார், முருகன், விஜயகுமார் ஆகியோர் ராஜா மற்றும் அவரது மனைவியிடம், சண்டை குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். அப்போது ராஜா இது எங்கள் குடும்பப் பிரச்சனை, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் செல்லுங்கள் என கூறியதாக தெரிகிறது.
அப்போது, போலீஸார் மற்றும் ராஜா இடையே பிரச்சனை ஏற்பட்டதையடுத்து, 3 போலீஸாரும் ராஜா, அவரது மகன் சூர்யா ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இது குறித்த வீடியோ ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தாக்குதல் நடத்திய 3 போலீசார் வேலூர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். போலீஸாரின் இந்த கொடூர தாக்குதல் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் செங்கம் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் தமது குடும்பத்தை தாக்கிய போலீஸ் மீது நடவடிக்கை தேவை என்றும், தாக்குதல் நடத்திய 3 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் ராஜா கோரியுள்ளார். இதையடுத்து இந்த வழக்கு அவசர வழக்காக நாளை விசாரிக்கப்படும் உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.