இறந்த கணவரின் உடலுடன் 4 நாள் இருந்த துணைவியார்.. செங்கல்பட்டில் அதிர்ச்சி
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே இறந்தவர் உடலை 4 நாட்களாக வீட்டில் வைத்திருந்ததை அடுத்து செங்கல்பட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம், சென்னெரி ஊராட்சிக்குட்பட்ட பெரிய புத்தூர் கிராமம் உள்ளது. இங்கு நீஞ்சிலி அம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் தாமோதரன் (62). இவர் ஜாதகம் கணிப்பது பஞ்சாங்கம் பார்ப்பது போன்ற தொழில் செய்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி சாரதா என்ற மனைவி இறந்துவிட்டதால் தனக்கு உதவியாக இருந்த திருச்சியை சேர்ந்த ராஜேஸ்வரியுடன் கடந்த 6 ஆண்டுகளாக வாழ்ந்து வந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன் தாமோதரனை அக்கம்பக்கத்தினர் சரியாக காணவில்லை.
டிபன்
எனினும் ராஜேஸ்வரி அவ்வபோது அருகில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம் காசு கொடுத்து இரண்டு பேருக்கு டிபன் வாங்கி வர சொல்லுவார். இதனால் அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படவில்லை. அப்பகுதி மக்கள் தாமோதரன் எங்கே என்று விசாரித்தபோது அவர் ஊருக்கு போயிருக்கிறார் என ஏதாவது ஒரு பதில் சொல்லி அனுப்பி விடுவாராம்.
அக்கம்பக்கம்
இந்நிலையில் நள்ளிரவு அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் தாமோதரன் வீட்டுக்குள் நுழைந்து பார்க்க முயன்றனர். அப்போது ராஜேஸ்வரி வந்தவர்களை தாக்கி உள்ளார். ராஜேஸ்வரியை தள்ளிவிட்டு உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஒருவரது உடல் கிடந்தது. வீடு முழுவதும் புழுக்கள் மேய்ந்து கொண்டிருந்தது.
தகவல்
உடனே கிராம நிர்வாக அதிகாரிக்கு தகவல் கொடுக்கப்பட்டு செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது தாமோதரன் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை
ராஜேஸ்வரி கடந்த 3 ஆண்டுகளாக சற்று மனநிலை பாதிக்கப்பட்டவராக காணப்படுவதாக அக்கம்பக்கத்தினர் தெரிவிக்கின்றனர். ராஜேஸ்வரி அவர் வீட்டு பக்கம் யாரையும் அனுமதிக்க மாட்டார் எனது கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தாமோதரன் இயற்கையான முறையில் இறந்தாரா இல்லை கொல்லப்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.