சென்னை கறிக்கடை சாக்கடையில் தவறி விழுந்த 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு... கடைக்கு சீல்!
சென்னை : சென்னை வேளச்சேரியில் கறிக்கடை சாக்கடையில் 5 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின் அச்சிறுவன் உயிருடன் மீட்கப் பட்டான்.
சென்னை வேளச்சேரியில் கறிக்கடை ஒன்றிற்கு அருகே இருந்த கழிவு நீர் கால்வாயில் எதிர்பாராதவிதமாக 5 வயது சிறுவன் ஒருவன் தவறி விழுந்தான். உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் சிறுவனை மீட்க தீவிரமாகப் போராடினர்.
சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக நடந்த போராட்டத்தின் முடிவில், 15 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவன் உயிருடன் மீட்கப் பட்டான். அதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட அச்சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டான்.
போலீசாரின் விசாரணையில், அச்சிறுவன் தண்டீஸ்வரத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிய வந்துள்ளது. தனது தந்தையுடன் இறைச்சி வாங்க அந்தச் சிறுவன், கறிக்கடை அருகே இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்துள்ளான் எனத் தெரிய வந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அந்தச் சிறுவன் தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து சுகாதாரத்துறை மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இறைச்சிக் கடையில் ஆய்வு நடத்தினர்.
அப்போது அந்த கடை, விதிகளை பின்பற்றாமல் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்த இறைச்சியையும் பறிமுதல் செய்தனர். விதிமுறைகளைப் பின்பற்றாத இறைச்சி கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.
கடந்தாண்டு பெங்களூருவில் மழை நீர் கால்வாயில் அடித்துச் செல்லப்பட்ட தமிழக சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், 5 வயது சிறுவன் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.