”பொன்விழா” கண்டது சென்னை விமான நிலையம் - கண்ணாடிக் கதவு, மேற்கூரை இடிபாடுகளில்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 50ஆவது முறையாக மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.உள்நாட்டு முனையத்தின் 2ஆவது தளத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பயணிகள் அச்சத்திற்குள்ளாகினார்கள்.
அப்பகுதியில் சுதந்திர தினத்தை ஒட்டி வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது இவ்விபத்து நடந்துள்ளது.
சுமார் 2300 கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2013ஆம் ஆண்டில் இருந்து செயல்படத் துவங்கியது.அன்றில் இருந்து இன்று வரை 50 தடவை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது.
2014-15ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 14.19 மில்லியன் பயணிகளை கையாளும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் நாள் ஒன்றிற்கு 342 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்திய விமான நிலையங்களில் 3ஆவது மிக பரபரப்பான விமான நிலையமாக உள்ள சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் குறித்து பல முறை பயணிகள் புகார் தெரிவித்தபோதும் இதுவரை அது குறித்து எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை குமுறுகின்றனர்.
ஞாயிற்றுக் கிழமை அன்று இரவுதான் 49வது முறையாக கண்ணாடிக் கதவு ஒன்று நொறுங்கியது. இந்நிலையில் ஒரே நாள் இடைவெளியில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.