சென்னை விமான நிலைய வரலாற்றில் 53வது முறையாக.... கண்ணாடிக் கதவு “பணால்”!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 53வது முறையாக கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்து ஏற்பட்ட விபத்தால் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
சென்னையில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று கண்ணாடிக் கதவு விழுந்து விபத்து நேரிட்டது. சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தின் புறப்பாடு பகுதியில் உள்ள நுழைவு வாயிலில் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடிக்கதவு விழுந்து விபத்துக்குள்ளானது.
சுமார் 2300 கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்பட்ட சென்னை விமான நிலையம் 2013ஆம் ஆண்டில் இருந்து செயல்படத் துவங்கியது. அன்றில் இருந்து இன்று வரை 53 வது தடவை விமான நிலையத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. 2014-15ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 14.19 மில்லியன் பயணிகளை கையாளும் சென்னை விமான நிலையத்தில் இருந்து சுமார் நாள் ஒன்றிற்கு 342 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்திய விமான நிலையங்களில் 3ஆவது மிக பரபரப்பான விமான நிலையமாக உள்ள சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் குறித்து பல முறை பயணிகள் புகார் தெரிவித்தபோதும் இதுவரை அது குறித்து எந்த ஒரு விசாரணையும் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை குமுறுகின்றனர்.
விமான நிலையம் புதிதாக கட்டப்பட்டு, மேற்கூரை இடிந்து விழுவது, கண்ணாடி விழுந்து நொறுங்குவது என இதுவரை 53 விபத்துகள் நேரிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.