'காயலான்' கடை வைக்கலாமோ? அரை சதமடிக்க காத்திருக்கும் சென்னை விமான நிலைய மேற்கூரை விபத்து!!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 37 ஆவது முறையாக மேற்கூரை இடிந்துவிழுந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
விமான நிலையத்தில் 2 கண்ணாடிகள் 37வது முறையாக நொறுங்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. உள்நாட்டு முனையம் அருகே இன்று மீண்டும் மேற்கூரை கண்ணாடி உடைந்து விழுந்தது.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு இன்று வரும் வழியில் மேற்கூரை உடைந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பல ஆயிரம் கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி உடைந்து விழுவதும், டைல்ஸ் கற்கள் பெயர்ந்து விழுவதும், மேற்கூரை இடிந்து விழுவதும் வாடிக்கையாக உள்ளது.
2 முனையங்களிலும் திடீர் திடீரென இந்த சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுவரையில் பயணிகளுக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படாத வகையில் விபத்துகள் நடந்துள்ளன.
தரமான முறையில் கட்டுமானப்பணிகள் மேற் கொள்ளாததால் அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
சர்வதேச தரத்திற்கு கட்டப்பட்ட இந்த விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடக்கும் இத்தகைய விபத்துகளால் பயணிகள் மட்டுமின்றி அங்கு பாதுகாப்பில் இருக்கும் ஊழியர்கள், தொழிற் பாதுகாப்பு படையினர் அச்சத்தில் உள்ளனர்.
சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மத்திய அமைச்சர் ஒருவர் வரும் நேரத்தில் இதுபோன்ற விபத்து நடைபெற்றது அதிகாரிகளிடையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.