30வது முறையாக உடைந்து நொறுங்கிய சென்னை விமான நிலைய கண்ணாடி.. தொடரும்!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் 30 ஆவது முறையாக கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் செயல்படுகின்றன.
அங்கு கடந்த 2 ஆண்டுகளில் இதுவரை 9 முறை மேற்கூரை இடிந்து விழுந்தது.
உடைந்து விழும் கண்ணாடிகள்:
மேலும், 8 முறை கண்ணாடி கதவுகளும், தடுப்பு கண்ணாடிகளும், 4 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும் உடைந்து விழுந்துவிட்டன.
உயிர்சேதம் எதுவும் இல்லை:
மொத்தமாக, 29 முறை அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்ணாடிகள் உடைந்து விழுந்துள்ளன.இந்த சம்பவம் நிகழ்ந்த போது பயணிகளோ, ஊழியர்களோ இல்லாததால் எந்தவித உயிர்சேதமும் ஏற்படவில்லை.
மீண்டும் உடைந்த கண்ணாடி:
இந்த நிலையில் விமான நிலையத்தில் உள்நாட்டு வருகை பகுதியில் இருந்து பன்னாட்டு விமான நிலையத்திற்கு செல்லும் அவசர கால நுழைவு வாயிலின் கண்ணாடி கதவின் ஒரு பகுதி நேற்று காலை 10 மணி அளவில் உடைந்து விழுந்தது.
போலீஸ்காரர் படுகாயம்:
7 அடி உயரமும் 4 அடி அகலமும் கொண்ட கண்ணாடி கதவு உடைந்து விழுந்ததில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழிற்படை போலீஸ்காரர் அன்வர்பாஷா என்பவர் படுகாயம் அடைந்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை:
உடனே அவரை விமான நிலைய ஊழியர்களும், பாதுகாப்பு பணியில் இருந்தவர்களும் மீட்டு விமான நிலையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதிகாரிகள் விசாரணை:
இது குறித்து தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் வந்து உடைந்த கண்ணாடி பகுதிகளை அகற்றினார்கள். மேலும், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் விபத்துகள்:
விமான நிலையத்தில் 30 ஆவது முறையாக நடைபெற்ற அசம்பாவித சம்பவம் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள் அடிக்கடி விழும் சம்பவங்கள் தொடர்வதாக பயணிகள் தெரிவித்தனர்.