பிரதமர் மோடி வருகை: சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு.. 20,000 போலீஸ் குவிப்பு
Recommended Video
சென்னை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது.
ஜெயலலிதாவின் கனவு திட்டமான மானிய விலை ஸ்கூட்டர் திட்டத்தை ஜெயலலிதாவின் நண்பரும் நாட்டின் பிரதமருமான மோடி தொடங்கி வைக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை சென்னைக்கு வருகிறார்.
ஏர்போர்ட்டில் 7 அடுக்கு பாதுகாப்பு
இதனை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பலத்த சோதனைக்குப் பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
10 கம்பெனி சிறப்பு போலீஸ்
பிரதமர் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 10 கம்பெனி சிறப்பு போலீஸ் படையினரும் கண்காணித்து வருகிறார்கள்.
நாளை மறுநாள் புதுச்சேரி
ஸ்கூட்டர் வழங்கும் விழா முடிவடைந்ததும் அங்கிருந்து நேராக கிண்டி கவர்னர் மாளிகைக்கு செல்லும் பிரதமர் மோடி நாளை இரவு அங்கு தங்குகிறார். நாளை மறுநாள் புதுச்சேரியில் நடக்கும் நிகழ்ச்சியில் மோடி பங்கேற்கிறார்.
புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு
இதற்காக நாளை காலையில் கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையம் செல்லும் அவர், அங்கிருந்து புதுவை செல்கிறார். புதுச்சேரி நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை இரவே சென்னை திரும்பும் மோடி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி புதுவையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
|
பாதுகாப்பு குறித்து ஆலோசனை
பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.