வெள்ளத்தில் மிதக்கும் சென்னை விமான நிலையம் டிச.6 வரை மூடல்! அனைத்து விமானங்களும் ரத்து!!
சென்னை: சென்னையில் இடைவிடாது பெய்த கன மழையால் விமான நிலைய ஓடு பாதையிலும் தண்ணீர் வெள்ளமாக தேங்கியுள்ளது. இதனால் விமான சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு விமான நிலையம் நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் இன்று இயக்கப்பட இருந்த அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமான நிலையம் டிசம்பர் 6-ந் தேதி வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர்.
Most of international flights to Chennai were sent to Bangalore or Trichy I presume. Would they allow to disembark based on #ChennaiRains
— Vijayashankar (@vjshankar) December 2, 2015
காற்றழுத்த தாழ்வுநிலையால் திங்கட்கிழமை பிற்பகல் முதல் சென்னையில் விடாமல் கனமழை கொட்டியது. 40 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் சென்னையில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக்காடாக மாறியுள்ளது. மோசமான வானிலையால், விமானங்கள் தரை இறங்குவதில் சிரமம் ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்திற்கு தரை இறங்குவதற்காக வந்த 15 விமானங்கள் தரை இறங்க முடியாமல் ஹைதராபாத், பெங்களூர் விமான நிலையங்களுக்கு திருப்பிடப்பட்டன. மேலும் விமான நிலையத்திற்குள் விமானம் நிறுத்தப்படும் இடங்களிலும் ஓடு பாதையிலும் வெள்ளமாக தேங்கியிருந்த மழை நீரால் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய விமானங்களின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
|
விமான நிலையம் மூடல்
செவ்வாய்கிழமையன்று 11 சர்வதேச விமானங்கள், மற்றும் 9 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் இவ்வாறு ரத்து செய்யப்பட்டன. மோசமான வானிலை நீடித்ததால் விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டு இன்று காலை 9 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விமான நிலைய சேவை மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து நிலைமை மறுஆய்வு செய்த பின்னர் காலையில் அறிவிக்கப்படும் என விமான நிலைய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
|
பயணிகள் பாதிப்பு
விமான சேவை ரத்தானதால் சுமார் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு பெரிய ரக விமானங்களை இயக்கி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளதாக அதன் நிர்வாக இயக்குனர் அஷ்வானி லோஹானி தெரிவித்தார்.
|
அனைத்து விமானங்களுக்கும் ரத்து
இன்றும் வானிலை மோசமாகவே உள்ளது. வெள்ளநீர் வடியவே இல்லை. மழை நீடிப்பதால் விமானங்களை இயக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது இதன் காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து இயக்கப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு விடுமுறை
கனமழை காரணமாக, சென்னையில் மூன்று இடங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு அடுத்த 2 நாள்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் நேர்முகத்துக்கு முன்பதிவு செய்தவர்கள் வேறு நாட்களில் முன்பதிவைப் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
ஒரே நாளில் 256 மி.மீ., மழை பதிவு
சென்னை அதன் சுற்று வட்டாரங்களில் செவ்வாய்கிழமை (01-12-15) காலை 8.30 மணி முதல் தற்போது வரை தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதில் சென்னையில் மட்டும் சராசரியாக நேற்று ஒரே நாளில் 256 மி.மீ., மழை பதிவானது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நேற்று காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 118 மி.மீ., மழையும், மீனம்பாக்கத்தில் 175 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
|
விமான நிலையம் நாளைவரை மூடல்
வெள்ள நீர் முற்றிலும் வடிந்த பின்னரே விமானத்தை இயக்கமுடியும் என்பதால் சென்னையில் உள்ள சர்வதேச, உள்ளூர் விமான நிலையங்கள் நாளை வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் இதனால் ஆயிரக்கணக்கான விமான பயணிகள் தவித்து வருகின்றனர்.