முதலில் கண்ணாடியெல்லாம் உடைஞ்சது.. இப்போ குழாயெல்லாம் உடையுது.. வெல்கம் டூ சென்னை ஏர்போர்ட்!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் குழாய் உடைந்ததால் தண்ணீர் இன்றி பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களுக்கு விமான நிலையத்தில் உள்ள கீழ் நிலை தொட்டியில் இருந்து குழாய்கள் மூலமாக தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நேற்று மதியம் திடீரென தொட்டியில் இருந்து விமான நிலையத்துக்கு செல்லும் தண்ணீர் குழாய் உடைந்ததாக கூறப்படுகிறது.
இதனால் விமான நிலையத்துக்கு செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விமான நிலையத்தில் உள்ள கழிவறை மற்றும் பிற பயன்பாட்டுக்கு தண்ணீர் இன்றி பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள், ஊழியர்களுடன் விரைந்து வந்து, குழாயில் உடைப்பு ஏற்பட்ட பகுதியை சீர்செய்தனர். பின்னர் தண்ணீர் வினியோகம் சீரானது. இதனால் விமான நிலையத்தில் தண்ணீர் இன்றி 1 மணி நேரம் பயணிகள் அவதி அடைந்தனர்.
இதுபற்றி விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, "தண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டது. எங்கு உடைப்பு ஏற்பட்டது என்பது கண்டறியப்பட்டு உடனடியாக அது சரி செய்யப்பட்டது" என்றனர். ஏற்கனவே விமான நிலைய கண்ணாடிக் கதவுகள் தொடர்ந்து உடைந்து விழுகின்ற நிலையில் தற்போது தண்ணீருக்கும் பிரச்சினை ஏற்பட்ட நிகழ்வு பயணிகளை அதிர்வடையச் செய்துள்ளது.