சென்னை அம்மா உணவகங்களில் இட்லி, பொங்கல், சப்பாத்தி உற்பத்தி 50% குறைப்பு!!
சென்னை: அம்மா உணவகத்தில் அதிகரித்து வரும் நஷ்டத்தை சமாளிக்கும் வகையில், இட்லி, பொங்கல், சப்பத்தி உற்பத்தி பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் அம்மா என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது திறக்கப்பட்டன. சென்னை அரசு பொது மருத்துவமனை உட்பட 3 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகம் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது.
அம்மா உணவகங்களில் 1 ரூபாய்க்கு ஒரு இட்லி, பொங்கல் ரூ.5, கலவை சாதங்கள் ரூ.5, தயிர் சாதம் ரூ.3 என்ற வீதத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
இதுதவிர மாலையில் 2 சப்பாத்தி, பருப்பு கடைசல் ரூ.3க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சாப்பாடு வகைகளில், சப்பாத்தி வழங்குவதில் தான் அதிக செலவு ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சப்பாத்தி உற்பத்தி செய்வதற்காக கோவையில் உள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து ரூ.1.96 கோடியில் 14 இயந்திரங்கள் மாநகராட்சி சார்பில் கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் 1 மணி நேரத்திற்கு 1,200 சப்பாத்தி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்தது. ஆனால், 800 சப்பாத்தி மட்டுமே இயந்திரம் உற்பத்தி செய்தது. இதனால், 14 சப்பாத்தி இயந்திரத்தையும் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், மண்டலத்திற்கு 15 ஆட்கள் வீதம் சப்பாத்தி செய்ய ஆட்களை மாநகராட்சி சார்பில் நியமித்து, ஒவ்வொரு அம்மா உணவகத்திற்கும் 2 ஆயிரம் சப்பாத்தியை உற்பத்தி செய்து அனுப்பப்பட்டு வந்தது. இதில் அதிகளவு முறைகேடுகள் மற்றும் அதிக செலவு காரணமாக சி.ஐ.டி.நகர், சாந்தோம் நெடுஞ்சாலை, அரசு பொது மருத்துவமனை, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் சப்பாத்தி, இட்லி, பொங்கல் உற்பத்தியை மாநகராட்சி திடீரென பாதியாக குறைத்துள்ளது.
இதுதவிர 12 பேர் வேலைபார்த்த உணவகங்களில் ஆள்குறைப்பும் நடைபெறுகிறது. சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் 4 பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளனர். அரசு பொது மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்திலும் ஆட்கள் குறைக்கப்பட்டுள்ளனர்.
அம்மா உணவகங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் சென்னை முழுவதும் 2.5 லட்சம் பேர் பயனடைந்து வருவதாக கூறப்படுகிறது. உற்பத்தி குறைக்கப்பட்டதால் சாப்பாடு கிடைக்காமல் பட்டினியுடன் திரும்பும் நிலை பல வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.