உலக தாய்மொழி தின கொண்டாட்டம்... தமிழச்சிகள் அணிவகுத்து நின்று அழகூட்டிய 'தமிழ்'!
உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதையொட்டி சென்னையில் கல்லூரி மாணவிகள் தமிழ் என்று அணிவகுத்து நின்று தங்களின் மொழிப்பற்றை வெளிக்காட்டினர்.
சென்னை: சர்வதேச உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு சென்னையை சேர்ந்த தனியார் கல்லூரி மாணவிகள் தமிழ் என்று அழகாக அணிவகுத்து நின்று தங்களின் மொழிப்பற்றை வெளிக்காட்டினர்.
மொழி ஒருவருக்கொருவர் கருத்துகளை பரிமாறிக்கொள்ள பயன்படுத்தும் தொடர்புக்கான வழி. எத்தனை மொழிகள் இருந்தாலும் அவரவர் தாய்மொழியில் படிப்பதே சிறந்தது. தாய்மொழியில் கற்கும் போது அந்த கருத்து நம் மனதில் நிலைத்திருக்கும் என்பதோடு, அது தொடர்பான புரிதல்களும் அதிக அளவில் இருக்கும்.
அறிவின் வளர்ச்சி தாய்மொழியால் மட்டுமே சாத்தியம். தாய்மொழியே நம் அடையாளம், பண்பாட்டின் நீட்சி. சிந்தையில் விந்தையை ஏற்படுத்தும் ஆற்றல் தாய்மொழிக்கு மட்டுமே உண்டு. மக்களால் பேசப்படாத மொழி அழிந்து போகிறது. உலகில் இரண்டு வாரங்களுக்கு ஒரு மொழி வழக்கிழந்து அழிந்துபோகிறது.
இனிமையான மொழி
மூவாயிரம் ஆண்டுகளாக தமிழ் மொழி, மக்களால் பேசப்பட்டும் எழுதப்பட்டும் இந்த நுாற்றாண்டிலும் இளமையாகவும் இனிமையாகவும் உயிர்ப்போடும் இருக்கிறது. உலக நாடுகளில் 90 மில்லியன் மக்களாலும் பேசப்படும் மொழியாக நம் அன்னைத் தமிழ் திகழ்கிறது.
கலப்பில்லாமல் எழுத வேண்டும்
தமிழ் மொழி வட்டாரங்களுக்கு ஏற்ப மாறுபட்டாலும் அதன் இனிமை மட்டும் என்றுமே நிலைத்து நீடித்திருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழ் மொழியை வாழ வைக்க வேண்டுமெனில் பிற மொழி கலப்பு இல்லாமல் தமிழை பேசவும், எழுதவும் பழகுவதே தமிழை தாய்மொழியாகக் கொண்டுள்ளவர்களின் தலையாய கடமையாகும்.
சர்வதேச தாய்மொழி தினம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ம் தேதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் அவரவர் தாய்மொழி சிறக்க நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை யோசித்து செயல்பட வேண்டும். தமிழகம் முழுவதும் பள்ளியில் தாய்மொழியான தமிழில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி என்று மாணவர்களுக்காக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
மாணவிகளின் அழகிய அணிவகுப்பு
கல்லூரிகளிலும் மாணவர்களிடையே தமிழ் மொழி வளர்ப்பு குறித்த ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. சென்னை அண்ணா நகரில் உள்ள வள்ளியம்மாள் கல்லூரிப் பெண்கள் சர்வதேச தாய்மொழி தினத்தை வித்தியாசமான முறையில் கொண்டாடினார்கள். கல்லூரி மாணவிகள் அனைவரும் ஒன்று கூடி அணிவகுத்து நின்று தமிழ் ஒன்ற அழகிய மொழியை உருவாக்கி காட்டினர். தமிழ் தான் எங்கள் தாய்மொழி என்பதை உரக்கச் சொல்லும் தமிழச்சிகளின் குரல் போல இந்த காட்சி அமைந்தது.