சென்னை அண்ணாசாலையில் உருவான திடீர் பள்ளம்- பயணிகளுடன் விழுந்த அரசு பேருந்து- வீடியோ
சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் அருகில் 12 அடிக்கு திடீரென பள்ளம் உருவானது. அதில் அரசுப் பேருந்தும் காரும் விழுந்தன. ராட்சத கிரேன் மூலம் அவை மீட்கப்பட்டன.
சென்னை: சென்னை அண்ணாசாலையில், அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் திடீர் பள்ளம் உருவானதில் ஒரு அரசு பேருந்தும் காரும் அதில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் அண்ணாசாலையே பரபரப்பானது.
சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணி ஐந்து வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று அண்ணா மேம்பாலம் அருகில் 12 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் உருவானது. இந்த பள்ளத்தில் சென்னை மாநகர அரசுப் பேருந்தும் காரும் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 37 பயணிகள் இருந்துள்ளனர்.
அவர்களில் ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. காரை ஓட்டி வந்தவருக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை.
பள்ளத்தில் விழுந்த பேருந்தையும் காரையும் ராட்சத கிரேன் கொண்டு மீட்டெடுத்தனர். இந்த சம்பவத்தால் நேற்று அண்ணாசாலை பரபரப்பானது. இன்று மாலைக்குள் அங்கு போக்குவரத்து சீர் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.