திடீர் திடீர்-ன்னு உடையுதாம், சாயுதாம்.. 78-வது முறையாக நொறுங்கிய சென்னை ஏர்போர்ட் கண்ணாடி
சென்னை விமான நிலையத்தில் கண்ணாடி விழுந்து நொறுங்கியது.
சென்னை: 78-வது முறையாக விழுந்து நொறுங்கியுள்ளது சென்னை விமான நிலையத்தின் கண்ணாடி.
சென்னை விமான நிலையத்தில் ஒருநாள் கண்ணாடி உடைகிறது. இன்னொரு நாள் சுவர் பெயர்ந்து விழுகிறது. மற்றொரு நாள் மேற்கூரை சரிகிறது.. இப்படியே 78 முறை முறை நடந்து கொண்டுள்ளது இதில் பலபேர் காயமும் அடைந்துள்ளனர்.
சென்னை விமான நிலையம் சுமார் ரூ.2000 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது புதுப்பிக்கப்பட்ட பணியின்போது விலைஉயர்ந்த கண்ணாடி கதவுகள், சுவர்கள் வைத்து பிரமாண்ட பணி நடைபெற்று, கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. ஆனால் சில மாதங்களிலேயே கண்ணாடிகள், மேற்கதவுகள், நொறுங்க தொடங்கின.
விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறங்கும்போதும், புறப்படும்போதும் அதிர்வு ஏற்படுவதன் காரணத்தினாலேயே இந்த சம்பவங்கள் நடைபெறுவதாக விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சொல்லப்பட்டு கொண்டே வருகிறது. ஆனால் விசாரணை முடிந்தபாடும் இல்லை, கண்ணாடி உடைவது நின்ற பாடும் இல்லை.
இன்றும் கூட கண்ணாடி தடுப்பு உடைந்து விழுந்து நொறுங்கியது. இதனால் அங்கிருந்த பயணிகள் அலறியடித்து ஓடியதில் பரபரப்பு ஏற்பட்டது. பலத்த காற்று காரணமாக கண்ணாடி உடைந்ததாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் இதற்காக என்ன நடவடிக்கைகள் இதுவரை எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. விமான நிலையம் புதுப்பிக்க ஒப்பந்தப்பணிகள் யாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. உயிரிழப்பு ஏதும் ஏற்படுவதற்கு முன்னால் நடவடிக்கை என்பதெல்லாம் பெயரளவுக்குதான் இருக்குமோ?
கடைசியில் ஹெல்மட் வாங்கி போட்டுக்கிட்டுதான் விமான நிலையம் உள்ளே போகணும் போல இருக்கு. பல்லாயிரம் மைல்கள்கூட பெருங்கடல்களின் மேல் பயணம் செய்து பாதுகாப்பாக விமானத்தில் தரை இறங்கி விட முடிகிறது. ஆனால் சென்னை விமான நிலையத்திலிருந்து உயிரோடு வெளியே வருவது கேள்விக்குறியாகிவிடுகிறது.