போதையில் போர்சே காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய 2 பேரும் சிறையில் அடைப்பு
சென்னை: சென்னையில் குடிபோதையில் தாறுமாறாக போர்சே சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கில் காரை ஓட்டியவரும் உடன் வந்த அவரது நண்பரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தி.நகரைச் சேர்ந்த விகாஷ் மற்றும் அவரது நண்பரும் குடிபோதையில் தாறுமாறாக போர்சே காரை ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்தியுள்ளனர். இதில் விகாஷ் என்பவர் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் விஜய் ஆனந்த் என்பவரின் மகன் என்றும் அவர் தான் காரை ஓட்டிச்சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
விகாஷின் நண்பர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் சகோதரர் என கூறப்படுகிறது. இருவரும் நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடந்த தமிழ்நாடு பிரிமீயர் லீக் போட்டியின் இறுதிப் போட்டியின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் குடிபோதையில் சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியுள்ளனர்.
அவரது கார் மோதியதில் ஆறுமுகம் என்ற ஆட்டோ டிரைவர் பலியானார். 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன. விகாஸ் ஓட்டி வந்த சொகுசுக்காரும் சேதமடைந்தது. சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவில் டிரைவர்கள் தூங்கி கொண்டிருந்தனர். அவர்களில் 9 பேர் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக ஜாமீனில் வெளிவர இயலாத அளவிற்கு 5 வழக்குகளை போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து கைதான விகாஸ், சரண்குமார் ஆகியோர் சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
கடந்த ஜூன் மாதம் ஐஸ்வர்யா என்ற இளம்பெண் போதையில் ஆடி காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியதில், கூலி தொழிலாளி ஒருவர் பலியானார். ஐஸ்வர்யா கைது செய்யப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.