உலகில் வாழத் தகுதியற்ற கீழ்த் தரமான காட்டுமிருகங்கள் நீங்கள்!
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தோருக்கு தண்டனையை அதிகரித்து வழங்க வேண்டும்.
Recommended Video
சென்னை: இது தமிழ்நாடுதானா? நாமெல்லாம் தமிழர்கள்தானா? மேற்கத்திய கலாச்சாரம் தாண்டவமாடும் மேலைநாடுகளில் கூட இந்த அக்கிரமம் நடந்திருக்காது. வாய்பேச முடியாத சிறுமியை ஒரு கூட்டமே பங்குபோட்ட கயவர்களை நினைத்தாலே உடம்பெல்லாம் பதறுகிறது.
இந்த சம்பவத்தில் முதல் தவறு பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் மீதுதான். பெற்ற பிள்ளையை ஒழுங்காக பராமரிக்க தெரியாதா? நன்றாக இருக்கக்கூடிய பெண் பிள்ளைகளையே காமவெறி கயவர்கள் விட்டு வைப்பதில்லை, அவ்வளவு எதற்கு பிறந்த குழந்தையை கூட விட்டுவைக்காத சம்பவம் ஆங்காங்கே நம் கண் எதிரிலேயே நடைபெறும்போது, 11 வயது சிறுமியை தனியாக இருக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை ஒரு தாயாரால் எப்படி உருவாக்க முடிந்தது?
அதுவும் அந்த பெண் வாய் பேச முடியாத பெண் என்று பெற்றவளுக்கு தெரியும்தானே? அப்படி இருக்கும்போது துணையில்லாமல் விட்டு செல்ல துணிவு எப்படி வந்தது? வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஒரு அவசரம், ஆபத்து என்றால் வாய் பேச முடியாத பெண் என்ன செய்வாள்? எப்படி தன் அபாயத்தை உணர்த்துவாள்? தன் குழந்தைக்கு ஒரு சிறு மாற்றம் என்றாலே ஒரு தாயால் அந்த பெண்ணை கண்ட அந்நிமிடமே கண்டறிய முடியாதா? யாருமே இல்லாத ஒரு அனாதைக்கு நடந்த சம்பவம்போல் அல்லவா இது இருக்கிறது?
லிப்ட்டில் இருந்து கீழே இறங்கி பின்னர் வாகனம் மூலம் மாணவி பள்ளி செல்வது வழக்கம். லிப்ட்டில் மாணவி வரும்போது லிப்ட் ஆபரேட்டர் ஒருவர் முதல் முதலில் மாணவியிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என கத்தி முனையில் மிரட்டியுள்ளார்.
பெற்றோர்கள் கவனிப்பு அவசியம்
குட் டச், பேட் டச் எனப்படும் பாலியல் சீண்டல்களை பெற்றோர் சொல்லித் தந்திருந்தால், முதல் சீண்டலிலேயே இது முற்றுப் பெற்றிருக்குமே, அந்த அப்பாவி பெண்ணும் இரையாகாமல் தப்பித்திருப்பாளே? பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மற்றவர்கள் தவறாக தொடாமல் இருக்க என்ன மாதிரியான வழிமுறைகள் என்பதை சொல்லி தர வேண்டும். அத்துடன் உடலின் அந்தரங்க உறுப்புகள் பற்றியும், அதை பிறர் தொடும்போது என்ன செய்ய வேண்டும், அவர்களுக்கு பதிலடி எப்படி தரலாம்? தம்மால் அவ்வாறு இயலாவிட்டால் உதவிக்கு யாரை அழைக்கலாம் என சொல்லிக் கொடுக்க இனியாவது முன்வரவேண்டும். பிள்ளைகள் உடல்ரீதியான குறைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் கூடுதல் கவனம் செலுத்தி அக்கறை காட்டுவது அவர்களுக்கு உடல், மன ரீதியாக மிகவும் அவசியம். பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய உடன் அன்றைய தினம், பேருந்து, சாலை, பள்ளி, கல்லூரிகளில் என்ன நடந்தது என கேட்டறிவது தினசரி கடமையாக கொள்ள வேண்டும்.
ஆண்களுக்கும் ஒழுக்கம் அவசியம்
கடந்த வாரம் 99 வயது முதியவர் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்துள்ளார். இந்த சம்பவத்திலும் 66 வயது லிப்ட் ஆப்ரேட்டர்தான் முதன்முதலில் வாய் பேச முடியாத பிஞ்சை நாசம் செய்துள்ளார். எனவே ஒழுக்கம் பெண் பிள்ளைகளுக்கு மட்டுமில்லாமல், ஆண் குழந்தைகளுக்கும் அதனை கண்டிப்புடன் கற்பித்து வழிநடத்த வேண்டும். செக்ஸ் வெறியில் அலைந்து திரிபவர்கள் மத்தியில் இன்னும் எத்தனை இளந்தளிர்கள் அல்லல்பட்டு கிடக்கின்றரோ தெரியவில்லை.
எப்படியெல்லாம் துடித்தாளோ?
நகரெங்கும் ஊர்பட்ட காமிராக்கள், ரோந்து போலீசார், மீடியா, விழிப்புணர்வு கூட்டங்கள், சமூக ஆர்வலர்கள், மாதர் சங்கங்கள் இதெல்லாம் இருந்தும் தமிழகத்தில் பெண் குழந்தைகள் பலாத்காரம் செய்யப்படுவது நின்றமாதிரியும் தெரியவில்லை. குறைந்தமாதிரியும் தெரியவில்லை. தமிழகம் பாதுகாப்பே இல்லாத சமுதாயமாக ஆகி கொண்டிருக்கிறதா? எந்த ஜீவராசிகளும், தனக்கு ஒரு வலி ஏற்பட்டால், அதனை வெளிப்படுத்த உதவும் கருவியே குரல்தான். அந்த குரலும் சிதைந்து போன ஒரு பெண், கயவர்களிடம் சிக்கி சீரழியும்போது வலிகளையும், வேதனையையும், எப்படி வெளிப்படுத்த முடியும்? அந்த வெறிநாய்களிடம் சிக்கியபோது என்னவெல்லாம் வேதனையில் துவண்டிருப்பாளோ? எப்படியெல்லாம் வலியால் துடித்திருப்பாளோ? என்பதை நினைத்துகூட பார்க்க முடியவில்லை.
இருக்க கூடாது
இப்படி கொடூரத்தை அரங்கேற்றியவர்களுக்கு வெறும் சிறைத்தண்டனையா? இது போதுமா அவர்களுக்கு? எந்தவகையில் இவர்களின் காம வெறிகளையும், இச்சைகளையும், மனிதாபிமானமற்ற முறைகளையும் களைந்துவிட போகிறது? என்ன வகையான மாறுதலை தந்துவிட போகிறது? இந்திய சட்டங்களை சரி செய்ய வேண்டியுள்ளது. பாலியல் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியுள்ளது. சிறுமிகளை சீரழித்து மாபாதகம் செய்தோருக்கு ஜாமீன், வாய்தா போன்ற சட்டத்தின் வழிகளை தடை செய்ய வேண்டும். உலகில் வாழத்தகுதியற்ற கீழ்த்தரமான காட்டுமிருகங்களை கழுவில் ஏற்றினாலும் மனம் ஆறாது, தூக்கிலிட்டாலும் இதய கனம் அடங்காது.. நெருப்பு குவியலுக்குள் இவர்களை தள்ளிவிட்டு பொசுக்கினாலும் இந்த கொடுமை மாறாது. தன் மகள் வயதில், தன் பேத்தி வயதில் உள்ள சிறுமியை சீரழித்தவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனையே தேவை என அனைவரும் குமுறுகின்றனர்.