சென்னை-பெங்களூர் தொழில் காரிடார் திட்டம்: முதலீட்டாளர் மாநாட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
சென்னை: பெங்களூர்-சென்னை இடையே தொழில் காரிடார் திட்டம் கொண்டுவரப்படும் என்றும் தமிழகம் தொழில்துறைக்கு ஏற்ற மாநிலம் என்றும் மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். சென்னையில் நடைபெற்றுவரும், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டில் சீதாராமன் இவ்வாறு கூறினார்.
தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள இரு நாள் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு சென்னையில் இன்று முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வர்த்தகம் மற்றும் தொழிலுக்கான சிறந்த கட்டமைப்பு சூழலை உருவாக்கியதற்காக தமிழக அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகம் வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ச்சிக்கான முனைப்பு கொண்ட ஒரு மாநிலம்.
ஹரியானா போன்ற மாநிலங்களை விடவும், தமிழகம், தொழில் முதலீடுகளை அதிகமாக ஈர்த்து வருகிறது. ஒற்றைச்சாளர முறையில், வரிகளை செலுத்தும் நடைமுறை எளிமையாக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது. இந்த மாநாட்டுக்கு கிடைத்துள்ள வரவேற்பை வைத்தே, மாநாட்டு வெற்றியை உணர முடிகிறது.
இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உற்பத்தி துறை பங்களிப்பு 17 சதவீதமாகத்தான் உள்ளது. எனவே, உற்பத்தி துறையில் அதிக கவனம் தேவைப்படுகிறது. தமிழகம் அதற்கான பாதையை திறந்துவிட்டுள்ளது.
வணிக நீதிமன்றங்கள் சட்டம் 2015 என்ற சட்ட மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகம் செய்துள்ளோம். ஹைகோர்ட்டுகள் அமைந்துள்ள இடங்களில் கமர்சியல் கோர்டுடகளும் அமைக்கப்படும். இதன் மூலம் வணிகம் சார்ந்த பிரச்சினைகள் விரைந்து தீர்த்து வைக்கப்படும்.
முதலீடு தொடர்ந்து வர வேண்டுமானால், சிவப்பு நாடா எனப்படும், தாமதப்படுத்தும் நடைமுறையை சகித்துக்கொள்ள முடியாது. மத்திய அரசு அதுபோன்ற நடைமுறையை சரி செய்யும்.
சென்னை-பெங்களூர் நடுவே தொழில் காரிடார் திட்டம் கொண்டுவரப்படும். இரு நகரங்களும் வளர்ந்த நகரங்கள் என்பதால் இதன் நடுவே தொழில் முதலீடுகளை ஈர்ப்பது எளிதாக இருக்கும். சென்னை அடுத்த பொன்னேரி தொழில் நகரமாக மாற்றப்படும். ஓசூரில் பொறியியல் மையம் அமைப்பதற்கான ஒப்புதல் விரைவில் வழங்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.
மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல் துறைக்கான இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசுகையில், தமிழகத்தில் உள்ள துறைமுகங்களை பயன்படுத்தி கடல்சார் தொழில்நிறுவனங்கள் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.