சென்னை, பெங்களூருவில் நூற்றாண்டு சாதனையை முறியடித்த நவம்பர் மாத மழை...
சென்னை: தமிழக தலைநகரமான சென்னையும், கர்நாடக தலைநகரமான பெங்களூருவும் நூற்றாண்டு சாதனையை முறியடித்திருக்கின்றனவாம். எதில் என்கிறீர்களா? மழை அளவில்தான். அந்த அளவிற்கு மழை கொட்டித்தீர்த்திருக்கிறதாம்.
நவம்பர் மாதம் பெய்யும் வடகிழக்குப் பருவமழையில் நனைவது பெரும்பாலோனோருக்கு பிடித்தமான விசயம்தான்... ஆனால் மழையாகவே இருந்தால்... வீட்டிற்குள் மழை தண்ணீர் வந்தால் எப்படி ரசிக்க முடியும்? அதுவும் சராசரி அளவை விட அதிகமாக பெய்த மழையால் நனைந்து நாறிப்போயிருக்கிறது சென்னை. பெங்களூருவிலும் இதேபோல அதிக அளவு மழை பெய்தும் எந்த பாதிப்பும் இல்லையாம்.
பெங்களூருவில் ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு பின் தற்போது நவம்பர் மாதத்தில் 290.4 மில்லிமீட்டர் மழை பெய்து புதிய சாதனை அளவு பதிவாகி உள்ளது. வரும் நாட்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் கூறி இருப்பதால், இந்த மழையின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மழை
தமிழ்நாட்டில், வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்தது. அவ்வப்போது உருவாகும் காற்றழுத்த தாழ்வு நிலைகளால் மாநிலம் முழுவதும் உள்ள பெரும்பான்மையான இடங்களில் கனமழை பெய்தது. கடலோர மாவட்டங்கள் மட்டுமல்லாது உள் மாவட்டங்களும் வெள்ள நீரில் தத்தளிக்கின்றன.
சென்னையில் 114 செ.மீ
சென்னையில் இயல்பைவிட இருமடங்கு மழை பெய்துள்ளது. அக்டோபர் 1ம் தேதி முதல் இன்று வரை 57 செ.மீ., மழைதான் பெய்திருக்க வேண்டும் ஆனால் இயல்பைவிட அதிகமாக 114 செ.மீ., சென்னையில் பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாத மழை
சென்னையில் நவம்பர் மாதத்தில் மட்டும் இதுவரை 118.5 செ.மீ அதாவது 1185 மி.மீ அளவிற்கு மழை பெய்துள்ளது. இது கடந்த 1918ம் ஆண்டு பெய்த 1088 மி.மீ பெய்த மழை அளவு சாதனையை முறியடித்து விட்டது. சென்னையில் நவம்பர் 23ம் தேதி ஒரே நாள் இரவில் சராசரியாக 139 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
குளிரும் பெங்களூரு
தமிழ்நாட்டின் எல்லைப்பகுதிகளான கோலார், பெங்களூரு, மைசூரு, சாம்ராஜ்நகர் உள்பட தென்கர்நாடக மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பெங்களூருவில் தினமும் மழை பெய்கிறது. நகரில் நாள் முழுவதும் தூறல் விழுந்து கொண்டே இருப்பதால், இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வருகிறது.
பெங்களூருவில் மழை சாதனை
பெங்களூருவில் கடந்த 1916ம் ஆண்டுக்கு பின், எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு நவம்பர் மாதத்தில் இது வரை 290.4 மி.மீ. மழை பெய்துள்ளது. இது புதிய சாதனை ஆகும். பொதுவாக நவம்பர் மாதத்தில் சராசரி மழையின் அளவு 54.1 மி.மீ.தான் பெய்யுமாம்.
5 மடங்கு அதிக மழை
ஆனால் இந்த ஆண்டு சராசரி அளவை விட சுமார் 5 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. வரும் நாட்களிலும் மழை பெய்ய அதிகளவு வாய்ப்புள்ளதால் இந்த அளவு மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்தார்.
காலநிலை மாற்றம்
ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் வங்ககடலில் ஏற்படும் காற்றழுத்தம் காரணமாக, பெங்களூருவில் அதிகளவு மழை பெய்யும். ஆனால் நடப்பு ஆண்டில், வங்ககடல் காற்றழுத்தம் தொடங்கும் முன்பே பெங்களூருவில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்து உள்ளது. பெங்களூருவில் தற்போது இடத்திற்கு இடம் பெரிய அளவிலான வானிலை மாற்றம் ஏற்பட்டு வருகிறதாகவும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மிரட்டும் மழை
ஏற்கனவே பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளமே தமிழகத்தில் இன்னும் வடியவில்லை. ஆனால் இன்னமும் மழை நீடிக்கும் என்று எச்சரிக்கிறது வானிலை ஆய்வு மையம். நவம்பர் 27ல் கனமழை பெய்யும்... நீங்க நல்லா பெய்ங்க ராசா... எவ்ளோ அடிச்சாலும் தாங்குவோம் என்கின்றனர் தமிழக மக்கள்.