மெரீனாவில் சுற்றிவரும் அதிநவீன கடற்கரை ரோந்து வாகனம்!
சென்னை: சென்னை மெரீனா,எலியட்ஸ் கடற்கரை பகுதிகளில் கண்காணிப்பை அதிகரிக்கும் வகையிலும் தண்ணீரில் மூழ்குபவர்களை மீட்கும் வகையிலும், அதிநவீன வாகன சேவையை தமிழக கடலோரப் பாதுகாப்பு குழுமம் வியாழக்கிழமை தொடங்கியது.
தமிழக கடல் பகுதிகளில் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் நவீனப்படுத்தப்படுகிறது. தமிழக கடல் பகுதிகளில் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் வகையில் கடற்பரப்பில் ரோந்து செல்வதற்காக சமவெளி, சகதி மணல் என அனைத்து நிலபரப்பிலும் செல்லக் கூடிய வகையில் 12 அதிநவீன வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
சென்னைக்கு 2 வாகனங்கள்
சென்னைக்கு இரண்டு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு வாகனம் மெரீனா கடற்கரைக்கும், மற்றொரு வாகனம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரைக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
சைலேந்திரபாபு
இந்த வாகன சேவையை மெரீனா கடற்கரையில் தமிழக கடலோரப் பாதுகாப்பு குழும ஏ.டி.ஜி.பி. சி.சைலேந்திரபாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இதேபோல, எலியட்ஸ் கடற்கரையில் இந்த சேவை தொடங்கி வைக்கப்பட்டது.
நவீன ரோந்து வாகனங்கள்
இந்த இரு கடற்கரைகளிலும் அதிகமானோர் கடலில் மூழ்கி இறக்கின்றனர். தண்ணீரில் மூழ்குபவர்களை மீட்பதற்கும், ரோந்து செல்வதற்கும் இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படும் என கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.
12 ஜீப்கள்
பிற வாகனங்கள் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், நாகப்பட்டினம் ஆகியப் பகுதிகளில் ரோந்து பணிக்குப் பயன்படுத்தப்பட உள்ளதாகவும், மேலும் நிலப் பகுதிகளிலும் செல்லக் கூடிய 12 ஜீப்கள் விரைவில் வாங்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கடலோர பாதுகாப்பு
சென்னை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை உள்ளிட்ட கடற்கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும் என்று கடலோர காவல்துறை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அதிகரிக்கும்
கடலோர கண்காணிப்பு பணியில் இந்த வாகனம் பயன்படுத்தப்படுவதன் மூலம் பாதுகாப்பு அதிகரிக்கும் என்று நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக கடலோர காவல் படையின் கூடுதல் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.