தீவிரவாதத்தை ஒடுக்க மக்கள் ஒத்துழைப்பு தேவை: தா.பாண்டியன் வலியுறுத்தல்
சென்னை: பயங்கரவாதத்தை ஜாதி, மதம் பார்க்காமல் தடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
சென்னைக்கு வந்த துரித ரயில் வண்டியில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்து 22 வயது பெண் சுவாதி என்பவர் உயிரிழந்துள்ளதும், மேலும் 14 பேர் காயம் பட்டுள்ளதும் மிகுந்த வேதனையைத் தரும் கொடுஞ் செய்தியாகும்.
பயங்கரவாதம், ஈவு இரக்கமற்ற, கண்ணற்ற மூர்க்கர்களால், முரடர்களால் முட்டாள்தனமாகச் செய்யப்படும் மனிதகுல விரோதக் கொடுஞ்செயலாகும்.
பயங்கரவாதக் குழுக்கள் பொதுமக்கள் கூடுகிற இடங்களில் தாக்குதலை நடத்துகிறார்கள். இத்தகைய குழுக்கள் என்ன காரணங்களைக்கூறி இந்தக் கொடுஞ் செயலில் ஈடுப்படாலும், அது ஏற்கத்தக்க போர் முறை அல்ல.
வெறிபிடித்த இத்தகைய கொலைக் கூட்டத்தைத் தடுப்பதில் காவல்துறை இன்னும் அதிகக்கவனம் செலுத்த வேண்டும். பொதுமக்களும் விவரங்கள் கிடைப்பதைத் தந்து உதவ வேண்டும் இது பொதுக்கடமையாகும். இது முளையில் கிள்ளப்பட வேண்டும்.
உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு லட்சம் என அறிவித்து இருப்பதை மாற்றி பத்து லட்சம் வழங்க வேண்டும். காயம்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை கொடுப்பதுடன் ஒரு லட்சம் வீதம் கொடுத்து மன அமைதிபெற உதவ வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கின்றது.
பயங்காரவாதம் வளர்ந்து விடாமல் தடுக்க, சாதி, மத, கட்சி வேறுபாடு பாராது அனைவரும், பயங்கரவாதப் போக்கைத் தடுத்து, மக்களைக்காக்க உதவிடவும் வேண்டுகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.