மவுலிவாக்கம் கட்டட விபத்து: 6 வாரத்திற்குள் ஆவணங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
சென்னை: சென்னை, மவுலிவாக்கம் அடுக்குமாடி கட்டட விபத்து குறித்த விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில், விபத்து குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை, போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் தனியார் நிறுவனத் தால் கட்டப்பட்ட, 11 மாடி கட்டடம், கடந்த ஜூன், 28ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், கட்டுமான பணியாளர்கள், 61 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கான காரணங்கள், தவறுகளுக்கு பொறுப்பானவர்கள், வருங்காலங்களில் இத்தகைய விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விசாரித்து பரிந்துரை அளிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி ரகுபதி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜூலை, 3ம் தேதி அமைக்கப்பட்டது.
அறிக்கை தாக்கல்
கட்டடம் இடிந்து விழுந்தது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், வருவாய் துறை, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும (சி.எம்.டி.ஏ.,) அதிகாரிகள், தீயணைப்புத் துறை என, பல்வேறு துறை அதிகாரிகளிடம், நீதிபதி ரகுபதி விசாரணை நடத்தினார். விபத்து குறித்த 523 பக்க விசாரணை அறிக்கையை கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் அப்போதய முதல்வர் ஜெயலலிதாவிடம் தாக்கல் செய்தார் ரகுபதி.
ஸ்டாலின் மனு
இந்நிலையில், இந்த விசாரணை அவசர, அவசரமாக நடத்தப்பட்டுள்ளதாக கூறியும், மவுலிவாக்கம் விபத்து குறித்த விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று கோரியும் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த மனு குறித்த விசாரணை இன்று வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கவுல், சத்யநாராயணா அடங்கிய பெஞ்ச், விபத்து தொடர்பான ஆவணங்களை வரும் டிசம்பர் 4ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து இந்த வழக்கை 6 வார காலத்திற்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது