மவுலிவாக்கம் கட்டிட விபத்து: மீட்கப்படும் சிதைந்த சடலங்கள்– ஒரே இடத்தில் இறுதிச்சடங்கு
சென்னை: சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் கட்டிட விபத்தில் இதுவரை 61 பேர் சடலமாகவும் 27 பேர் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் 25 க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது மீட்கப்படும் சடலங்கள் அழுகியும் சிதைந்தும் இருப்பதால் அவர்களை அடையாளம் காணமுடியாத சடலங்கள் பாலிதீன் பைகளில் சுற்றப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னை மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமை 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. அப்போது கட்டிடத்தின் பல்வேறு தளங்களிலும் இருந்த சுமார் 100 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் அந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் ஆவார்கள்.
இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புப் படையினர், தேசிய பேரிடர் குழுவினர், மெட்ரோ ரெயில் ஊழியர்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நவீன கருவிகள், மோப்ப நாய்கள், கிரேன்கள் உதவியுடன் மீட்புப் பணிகள் 6வது நடந்து வருகிறது.
இன்று (வியாழக்கிழமை) பிற்பகல் வரை ஒரு குழந்தை உள்பட 10-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து பலி எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. முதல் 3 நாட்கள் நடந்த மீட்புப் பணிகளில் கிடைத்த உடல்களையே அடையாளம் காண முடிந்தது. அதன் பிறகு இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் அழுகத் தொடங்கி விட்டன.
இதுவரை 85 சதவீத கட்டிட இடிபாடுகள் அகற்றப்பட்டுள்ளன. இன்னும் 15 சதவீத இடிபாடுகளே அகற்றப் பட வேண்டியதுள்ளது. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிவித்த அரசு வருவாய் துறை மூத்த அதிகாரி ஒருவர், இன்னும் 25 பேர் வரை இடிபாடுகளுக்கு இடையில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.