தலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு தள்ளுபடி.. சிபிஐ நீதிமன்றம் அதிரடி!
தமிழக அரசின் தலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு சென்னை சிபிஐ நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக அரசின் தலைமை கணக்காளர் அருண் கோயலின் ஜாமீன் மனு சென்னை சிபிஐ நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பொதுத்துறையில் கணக்காளர் பணி நியமனத்திற்கு 5 லட்சம் வாங்கியதாக அருண் கோயல் சென்ற வாரம் கைது செய்யப்பட்டார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏஜி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் நடத்திய சோதனையில் இவர் லஞ்சம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.
2015ம் ஆண்டு அருண் கோயல் தலைமை கணக்காளராக பொறுப்பேற்றுள்ளார். இவரால் நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளனர். இவருடன் லஞ்சப்பணம் வாங்க உதவிய மற்றொரு அதிகாரி கஜேந்திரன், தமிழக அரசு ஊழியர் சிவலிங்கம், ராஜா உள்ளிட்ட 4 பேரை கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதை எதிர்த்து அருண் கோயல் உட்பட 4 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்கள்.
இவர்கள் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்கள். அருண் கோயலுடன் ஜாமீன் கேட்ட 4 பேரின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதோடு 4 பேருக்கும் போலீஸ் காவலை ஏப்ரல் 20 வரை நீடித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.