சொகுசு கார் இறக்குமதி வழக்கு... சசிகலா கணவர் நடராஜனுக்கு பிடிவாரண்ட்
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சென்னை: லண்டனில் இருந்து லக்சஸ் சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
சசிகலா கணவர் நடராஜன், தினகரனின் தம்பி பாஸ்கரன் உள்ளிட்ட 4 பேர் கடந்த 1994-ஆம் ஆண்டு லக்சஸ் என்ற சொகுசு காரை லண்டனில் இருந்து இறக்குமதி செய்தனர். இந்த காரை இறக்குமதி செய்ததற்காக ரூ.1.6 கோடி வரி செலுத்துவது கட்டாயம்.
ஆனால் புதிய காரை பழைய கார் என்று கூறிய நடராஜன் வரி ஏய்ப்பு செய்தார். இதுதொடர்பாக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
2 ஆண்டுகள் சிறை தண்டனை
இதையடுத்து இந்த வழக்கில் நடராஜன், பாஸ்கரன், லண்டனை சேர்ந்த யோகேஷ் பாலகிருஷ்ணன், இந்தியன் வங்கியின் மேலாளர் சுஜாரிதா ஆகிய 4 பேருக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நவம்பர் மாதம் விசாரணை
இந்த தீர்ப்பை எதிர்த்து மேற்கண்ட 4 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதன்படி இந்த வழக்கானது கடந்த நவம்பர் மாதம் 17-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
காலஅவகாசம் கோரிக்கை நிராகரிப்பு
அப்போது நால்வரின் சிறை தண்டனையையும் உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைய நடராஜன் சிறிது கால அவகாசம் கோரிய மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து சென்னை குளோபல் மருத்துவமனையில் உடல்நலக் குறைபாடு காரணமாக நடராஜன் அனுமதிக்கப்பட்டார்.
பிடிவாரண்ட் பிறப்பிப்பு
மருத்துவமனையில் இருப்பதை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் கால அவகாசம் கேட்டு நடராஜன் வழக்கு தொடர்ந்தார். அப்போது சரணடைவதிலிருந்து நடராஜனுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை நடராஜன் தங்களிடம் வழங்காததால் சசிகலா கணவர் நடராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் பிடி வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர்.