பிஎஸ்என்எல் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய தயாநிதி, கலாநிதி- சிபிஐ பதிலளிக்க ஹைகோர்ட் அவகாசம்!
பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து தயாநிதிமாறன் உள்ளிட்டோர் தங்களை விடுவிக்க கோருவது தொடர்பாக நவம்பர் 10ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு சிபிஐக்கு நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது.
சென்னை : பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் தாக்கல் செய்த மனு மீது நவம்பர் 10ம் தேதிக்குள் விளக்கமளிக்குமாறு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்த தயாநிதிமாறன் அவரது பதவியை சன்டிவியின் சுயலாபத்துக்காக முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2004-06ம் ஆண்டு சென்னையில் உள்ள தனது வீட்டில் தனியாக டெலிபோன் எக்ஸ்சேஞ்சையே நிறுவி அங்கிருந்து பிஎஸ்என்எல் இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி அலுவலகத்துக்கு முறைகேடாக பயன்படுத்தியுள்ளார் என வழக்கு பதியப்பட்டது
பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியன் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. முதலில் இந்த இணைப்புகள் கோபாலபுரத்தில் உள்ள வீட்டிலிருந்தும், பின்னர் போட் கிளப் ஹவுஸ் சாலையில் உள்ள வீட்டிலிருந்தும் சன்டிவி நிறுவனத்துக்கு சென்றுள்ளது என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக 2011-ஆம் ஆண்டு சிபிஐ விசாரணையை தொடங்கியது. இந்த விவகாரத்தில் 2013-ம் ஆண்டு தயாநிதிமாறன், கலாநிதிமாறன், பிஎஸ்என்எல்லின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், சன் டிவியின் எலக்ட்ரீசியன் ரவி, பிஎஸ்என்எல் முன்னாள் மேலாளர் கே.பிரம்மநாதன், முன்னாள் துணை பொது மேலாளர் வேலுசாமி, மாறனின் தனி செயலாளர் கௌதமன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மீது சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்காக தயாநிதி மாறன் மற்றும் சன்டிவி ஊழியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி வருகின்றனர். நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்க வேண்டும் என்று கலாநிதிமாறன் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாநிதிமாறன் உள்ளிட்ட 7 பேர் வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மனு மீது சிபிஐ பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 10ம் தேதிக்குள் பதிலை அளிக்கும்படி சிபிஐ நீதிமன்ற நீதிபதிகள் அவகாசம் அளித்துள்ளனர்.