எச். ராஜா மீது புதிய வழக்குப் பாய்ந்தது.. எல்லாம் சரி, கைது எப்ப??
Recommended Video
சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அடுத்தடுத்து அவர் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகிறதே தவிர அவர் கைது செய்யப்படுவதற்கான எந்த அறிகுறியையும் காணவில்லை.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸார், காவல்துறை குறித்தும் நீதித்துறை குறித்தும் அவதூறாக பேசியதாக கூறி ஏற்கனவே பல்வேறு முக்கியப் பிரிவுகளில் ராஜா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரைக் கைது செய்ய தனிப்படைகளும் அமைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அந்தப் படைகள் என்னவாயின என்பது தெரியவில்லை. ராஜா வழக்கம் போலத்தான் செயல்பட்டு வருகிறார்.
அதேபோல ராஜா மீது திருவண்ணாமலையிலும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதேபோல திமுக எம்.பி. கனிமொழி மற்றும் மறைந்த தலைவர் கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாகவும் ராஜா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் சமீபத்தில் கடலூர் அதிமுக எம்.பி. அருண்மொழித்தேவன், எச். ராஜா மீது பரபரப்பு புகார் கூறினார். அவர் அளித்த பேட்டியின்போது, எச்.ராஜா மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசுகிறார். சர்ச்சைக்கு எல்லாம் எச்.ராஜா என்ன பதில் சொல்ல போகிறார். அரசியல் நாகரீகம் இன்றி அவன் இவன் என்று எச்.ராஜா பேசுகிறார். எச்.ராஜா சில்லறைத்தனமாக அற்பத்தனமாக நடந்து கொள்கிறார்.
ஏதோ எச்.ராஜா மட்டும்தான் இந்துக்களை பாதுக்காப்பது போல நடிக்கிறார். எதோ இவர்தான் இந்துக்களுக்காக பிறந்துள்ளதாக பேசுகிறார். அப்படியானால் நாங்கள் என்ன ஆங்கிலேயர்களா?. அதிமுகதான் பல கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தி உள்ளது. இந்து மதத்திற்கு இவர் உரிமை கொண்டாட பார்க்கிறார்.
அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். அவரை சாலையில் நடமாடவிட கூடாது. யாரோ வழிப்போக்கர்கள் சொல்லும் கருத்தை எல்லாம் பேசுகிறார். சுயவிளம்பரம் செய்கிறார், கலவரம் செய்து ஓட்டு வாங்க பார்க்கிறார். அவரின் நடவடிக்கை உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
நான் ஒரு கோவில் குளத்தை ஆக்கிரமித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். 100 சதவிகிதம் பொய்யான குற்றச்சாட்டுகளை வைக்கிறார். கோவில் நிலத்தை ஆக்கிரமித்தேன் என்று ராஜா நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகுவேன். காவல்துறை அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும். இல்லையெனில் நான் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுப்பேன் என்று கூறியிருந்தார். மேலும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸிலும் அவர் எச். ராஜா மீது புகார் கொடுத்திருந்தார்.
அந்தப் புகாரை ஏற்று இன்று வழக்குப் போட்டுள்ளனர் மத்திய குற்றப் பிரிவு போலீஸார். எச். ராஜா மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்தாலும் கூட அவர் எந்தவித சலசலப்புமின்றி சுதந்திரமாக நடமாடி வருகிறார். அதேபோல அவரைக் கைது செய்யும் எந்த நடவடிக்கையும் இதுவரை காவல்துறை சார்பில் எடுக்கப்படவில்லை என்பதும் முக்கியமானது.