குண்டு வெடிப்பு சென்னையை குறிவைத்து நடத்தப்பட்டதே: ரயில் கால அட்டவணையில் விடையுள்ளது
சென்னை: ரயிலில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல் சென்னையை குறிவைத்து நடத்தப்பட்டதே என்பது குறிப்பிட்ட ரயிலின் கால அட்டவணையை பார்த்தாலே தெரியும்.
பெங்களூரிலிருந்து புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் குவகாத்திக்கு இயக்கப்படும் ரயிலில் (எண் 12509) குண்டு வெடித்துள்ளது. இந்த ரயில் இரவு 11.30 மணிக்கு பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும்.
தமிழக டிஜிபி ராமானுஜம் சம்பவ இடத்தை பார்வையிட்டு செய்தியாளர்களிடம் பேசுகையில், காலை 5.40 மணிக்கு வரவேண்டிய ரயில் 7.20 மணிக்குதான் சென்னை சென்டிரல் வந்தது. சரியான நேரத்துக்கு ரயில் வந்திருந்தால் குண்டு வேறு எங்காவது வெடிக்க வாய்ப்பிருந்தது. ஆனால் இப்போதே அதுகுறித்து முழுமையாக தெரிவிக்க முடியாது என்றார்.
ரயிலின் கால அட்டவணைப்படி பார்த்தால் சென்னை சென்டிரலுக்கு 5.40 மணிக்கு வரும் ரயில் 6.20 மணிக்கு மீண்டும் புறப்படுகிறது. குண்டு வெடித்த 7.20 மணியளவில் எந்த ஒரு ரயில் நிலையத்திலும் அது நிற்கப்போவதில்லை. ஏனெனில் சென்னைக்கு அடுத்த நிறுத்தம் ஆந்திர மாநிலம் ஓங்கோல்தான். அதுவும் காலை 10.49 மணிக்குதான் சென்றடைகிறது. எனவே ஒங்கோலை குறிவைத்து தாக்குதல் நடத்த சதிகாரர்கள் திட்டமிட்டதாக நம்ப முடியாது.
சென்னையில் ரயில் பிளாட்பாரத்தில் வந்து நின்றபோது குண்டு வெடித்துள்ளது. காலதாமதம் ஆனாலும் சென்னை போன்ற முக்கிய நகரில் குண்டுவெடித்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது குண்டை வெடிக்க செய்தவன் சென்னையை குறிவைத்தே காத்திருந்து வெடிக்க செய்திருக்கலாம் என்று காவல்துறை வட்டார தகவல்கள் கூறுகின்றன.