தலைமை கணக்காளர் அருண் கோயல் சிறையில் அடைப்பு... லஞ்சப் பட்டியலை தயாரிக்கிறது சிபிஐ!
சென்னை ஏஜி அலுவலகத்தில் இருந்து நேற்று கைது செய்யப்பட்ட தலைமை கணக்காளர் அருண் கோயல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை : லஞ்சப் புகாரில் நேற்றைய தினம் சிபிஐயால் சென்னை ஏஜி அலுவலகத்தில் இருந்து கைது செய்யப்பட்ட தலைமை கணக்காளர் அருண் கோயல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஏஜி அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தலைமை கணக்காளர் அருண்கோயல் அறையில் நுழைந்த 2 சிபிஐ அதிகாரிகள் அவருடைய அலுவலகத்தில் இருந்த ஆவணங்களைக் கைப்பற்றி சோதனை நடத்தினர்.
அப்போது பணி நியமனத்திற்காக அருண் கோயல் வாங்கிய லஞ்சப் பணத்தை கைப்பற்றினர். இதனையடுத்து அருண் கோயல், அவர் லஞ்சப்பணம் வாங்க உதவிய மற்றொரு அதிகாரி கஜேந்திரன், தமிழக அரசு ஊழியர் சிவலிங்கம், ராஜா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.
அருண் கோயல் தான் பதவியேற்ற காலம் முதல் பொதுப்பணித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு தனி தணிக்கை கணக்காளர்களை நியமித்துள்ளார். இவ்வாறு செய்யப்பட்ட நியமனத்திற்காக அவர்களிடம் லஞ்சப் பணம் பெற்றதாக மத்திய அரசு ஊழியர் சங்கத்தினர் சிபிஐயிடம் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ சோதனை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
2015ம் ஆண்டு அருண் கோயல் தலைமை கணக்காளராக பொறுப்பேற்றுள்ளார். இவரால் நியமிக்கப்பட்ட ஒவ்வொருவரும் சுமார் 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை லஞ்சம் கொடுத்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் இவர் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுவதால் அவரால் நியமனம் செய்யப்பட்டவர்களின் பட்டியலை சிபிஐ தயாரித்து வருகிறது.
மேலும் அருண் கோயலின் வங்கிக்கணக்கையும் ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அருண் கோயலால் நியமனம் செய்யப்பட்டவர்கள் அரசுத் துறையில் தங்களுக்கு கிடைக்கும் கிம்பலத்தின் அடிப்படையில் தான் இவருக்கு லஞ்சம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.