வேட்டி கட்டி வந்த நீதிபதி, மூத்த வழக்கறிஞர்களை உள்ளே அனுமதிக்க மறுத்த சென்னை கிளப்!!
சென்னை: வேட்டி கட்டி வந்த ஒரு காரணத்துக்காகவே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ஆர்.காந்தி, ஜி.ஆர். சுவாமிநாதன் ஆகியோரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் கிளப் அனுமதிக்க மறுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தற்காலிக தலைமை நீதிபதி டி.எஸ். அருணாசலம் எழுதிய புத்தத்தின் வெளியீட்டு விழா தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் கிளப்பில் நேற்று நடைபெற்றது. குஜராத் உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கோகுல கிருஷ்ணன் அப்புத்தகத்தை வெளியிட ஹிமாச்சல பிரதேச முன்னாள் தலைமை நீதிபதி ஆர். ரத்னம் பெற்றுக் கொண்டார்.
வேட்டி கட்டியதால் அனுமதி மறுப்பு
இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று மாலை 5.25 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது நீதிபதியாக பணியாற்றும் ஹரிபரந்தாமன் காரில் சென்றுள்ளார். அவர் காரைவிட்டு இறங்கி விழா அரங்கம் நோக்கி செல்ல முயன்ற போது கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்துள்ளனர்.
அதிர்ச்சியில் நீதிபதி
நீதிபதி ஹரிபரந்தாமனும் ஏன் உள்ளே செல்ல அனுமதி மறுக்கிறீர்கள்? என்று கேட்டதற்கு "நீங்கள் வேட்டி அணிந்து வந்துள்ளீர்கள்.. இங்கே வேட்டி அணிந்து வருபவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை" என்று கூற நீதிபதியோ கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வழக்கறிஞர்களும் தடுத்து நிறுத்தம்
இதேபோல் மூத்த வழக்கறிஞர் காந்தி மற்றும் சுவாமிநாதன் ஆகியோரும் வேட்டி அணிந்து விழாவுக்கு வந்திருந்தனர். அவர்களையும் உள்ளே அனுமதிக்க கிரிக்கெட் கிளப் நிர்வாகம் மறுத்துவிட்டது.
ஆங்கிலேயர் காலத்து விதி
இதுகுறித்து நீதிபதி ஹரிபரந்தாமன் கூறுகையில், என்னை உள்ளே செல்ல அனுமதி மறுத்த கிரிக்கெட் கிளப் நிர்வாகி, விதிகளின் படி வேட்டி கட்டியவர்களை அனுமதிப்பதில்லை என்று கூறினார். அதற்கு நான், உடை கட்டுப்பாடு என்பது உறுப்பினர்களுக்காகத்தான்.. விருந்தினர்களுக்கு அல்ல என்று கூறினேன்.
இப்படி ஒரு விதியை கடைபிடிப்பவர்கள் ஏன் உறுப்பினர் அல்லாதவர்கள் விழா நடத்த அனுமதி கொடுக்கிறார்கள். ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட உடை விதிகள் நாடு சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகலாமாகியும் மாற்றப்படவில்லை என்பது துரதிருஷ்டவசமானது என்றார்.
சென்னையில் 5 கிளப்புகளில் இந்த கதி
இந்த சம்பவம் பற்றி மூத்த வழக்கறிஞர் காந்தி கூறுகையில், தமிழர்களின் தேசிய உடைதான் வேட்டி. இதற்கு பல இடங்களில் உரிய மரியாதை கொடுக்கப்படவில்லை. நேற்று வெள்ளிக்கிழமையும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஆனால் நிகழ்ச்ச்யை நடத்தியது நண்பர்கள் என்பதால் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கிரிக்கெட் கிளப்பின் உறுப்பினர்களும் கூட எனக்கு நண்பர்கள்தான்.. இருந்தாலும் பிரச்சனையை எழுப்ப வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.
சென்னை நகரைப் பொறுத்தவரையில் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், போட் கிளப், சென்னை கிரிக்கெட் கிளப், தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் கிளப் ஆகிய அனைத்திலுமே வேட்டி கட்டியவர்களை இப்போதும் அனுமதிப்பதில்லை என்றார்.
அன்று
கிருஷ்ணய்யர் இதற்கு முன்னர் 1980களில் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரும் கூட இதேபோல் சென்னை கிளப் ஒன்றில் வேட்டி கட்டி சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.