பார்த்து டிரஸ் பண்ணிட்டுவாங்க.. "பப்"புக்கு வரும் பெண்களுக்கு மெசேஜ் அனுப்பும் கிளப்கள்!
சென்னை: மும்பையில் போலீஸார் நடத்திய அதிரடி ரெய்டைத் தொடர்ந்து சென்னையில் உள்ள பல்வேறு கிளப்கள் பார்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளன. தங்களது பெண் வாடிக்கையாளர்களுக்கு நீட்டாக டிரஸ் செய்து கொண்டு வருமாறு கூறி அவர்கள் எஸ்எம்எஸ் அனுப்பி வருகின்றனராம்.
இதுகுறித்து ஒரு பப் உரிமையாளர் கூறுகையில், மும்பையில் போலீஸார் நடத்திய ரெய்டு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குட்டையான உடையுடன் வந்த பெண்களையும், நடத்தையையும் அவர்கள் குறி வைத்து ரெய்டு செய்து கைது செய்துள்ளனர். இதையடுத்து எங்களது பப்புக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களுக்கு, திருத்தமான முறையில் உடை அணிந்து வருமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.
டைட் ஜீன்ஸ் ஓகே
மேலும் அவர் கூறுகையில் முடிந்தவரை பேன்ட், ஜீன்ஸ் போன்றவற்றை அணிந்து கொண்டு வருமாறு கூறியுள்ளோம் என்றார்.
சீக்கிரமே மூடிட்டா பிரச்சினை இல்லை
இன்னொரு பப் உரிமையாளர் கூறுகையில் நள்ளிரவுக்கு மேலும் தாண்டி பப் இருக்கும்போதுதான் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே இரவு 11.30 மணியுடன் பப்பை மூடினால் சரியாக இருக்கும். அதை நாங்கள் தற்போது செய்ய ஆரம்பித்துள்ளோம்.
குட்டைப் பாவாடை கூடவே கூடாது
மேலும் எங்களது பப்புக்கு குட்டைப் பாவாடை, மினி டிரஸ் போன்றவற்றில் வந்த பெண்களை திருப்பி அனுப்பி விட்டோம். அதைத் தொடர்ந்து செய்கிறோம் என்றார் அவர்.
குறைந்தது ரெய்டு
சென்னையில் உள்ள பப்களில் போலீஸார் சமீப காலமாக ரெய்டுகளை நடத்தி வருகின்றனராம். இருப்பினும் தற்போது டாஸ்மாக் விவகாரம் சூடுபிடித்திருப்பதால் ரெய்டு குறைந்துள்ளதாம்.
குர்தா போட்டு வரலாம்
ஒரு பப் உரிமையாளர் கூறுகையில், பெண்கள் லெகாங், குர்தா போன்றவற்றை அணிந்து வந்தால் பிரச்சினையே இல்லை. குட்டையான உடையுடன் வரும்போதுதான் சில பிரச்சினைகள் ஏற்படக் காரணமாகி விடுகிறது என்றார்.
லேடீஸ் நைட் கட்
பல பப்களில் லேடீஸ் நைட் என்ற பெயரில் இரவு நேர மது விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதுபோன்ற பப்களைத்தான் போலீஸார் முதலில் குறி வைக்கின்றனர். இதனால் பல பப்களில் இந்த லேடீஸ் நைட் விருந்தை ரத்து செய்ய ஆரம்பித்துள்ளனராம்.
அப்படியெல்லாம் இல்லையே
ஆனால் இதுபோன்ற குறிப்பிட்ட மாரல் போலீஸ் ரெய்டுகளுக்கு நாங்கள் உத்தரவிடவில்ல என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், குறிப்பிட்டு சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. மாறாக வழக்கமான ரெய்டுகள்தான் நடத்தப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி இந்த ரெய்டுகளை நடத்தி வருகிறோம்.
வழக்கமான ரெய்டுதான்
வழக்கமாக ஹோட்டல்கள், லாட்ஜுகள் போன்றவற்றில் நடத்தப்படும் ரெய்டு போலத்தான் இதுவும். இதை மாரல் போலீஸிங்காக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றார்.