பாவாடை, தாவணி கட்டி... பாரம்பரிய முறையில் ஆடிப்பெருக்கு கொண்டாடிய சென்னை மாணவிகள்
சென்னை: சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகள் ஆடிப்பெருக்கை உற்சாகமாகக் கொண்டாடினர்.
ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப்பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள். இதனை 18ம் பெருக்கு என்றும் சிலர் குறிப்பிடுவார்கள்.
ஆடிப்பெருக்கன்று காவிரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டாடுவர்.
படையல்...
மேலும் அவர்கள் பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள்.
மஞ்சள் கயிறு...
சிறுவர்கள் படையலிட்ட மஞ்சள் கயிற்றினை கழுத்து மற்றும் கைகளில் ஒருவருக்கொருவர் உற்சாகத்துடன் கட்டிக் கொள்வார்கள்.
கல்லூரி மாணவிகள்...
அந்தவகையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் ஆடிப்பெருக்கு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கிராமிய நடன நிகழ்ச்சி...
தமிழர் பாரம்பரிய முறையில் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் மாணவிகள், பாவாடை தாவணி மற்றும் சேலைகளில் வலம் வந்தனர். மேலும், மாணவிகளின் கிராமிய நடன நிகழ்ச்சி நடைபெற்றது.