மவுலிவாக்கம் விபத்து: மற்றொரு கட்டடத்தை வெடி வைத்து தகர்க்க திட்டம்
சென்னை: சென்னை மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11 மாடிக் கட்டடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டடத்தை வெடி வைத்து தகர்க்க அரசு அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
போரூர் - குன்றத்தூர் இடையே மவுலிவாக்கத்தில் 'பிரைம் சிருஷ்டி' என்ற நிறுவனம், 'ட்ரஸ்ட் கைட்' என்ற பெயரில், இரண்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணியை, கடந்த ஆண்டு துவக்கியது. ஒவ்வொன்றும், 11 மாடிகளைக் கொண்டது.
ஒரு கட்டடத்திற்கு, 'தி பெய்த்' என்றும், மற்றொரு கட்டடத்திற்கு, 'தி பிலீப்' என்ற பெயரும் சூட்டப்பட்டது. ஒரு கட்டிடத்தில், ஒவ்வொரு தளத்திலும், இரண்டு படுக்கை அறைகள் கொண்ட, நான்கு வீடுகளும், மற்றொரு கட்டிடத்தில், ஒவ்வொரு தளத்திலும், மூன்று படுக்கை அறைகள் கொண்டதாக, நான்கு வீடுகளும் கட்டப்பட்டன.
இரண்டு படுக்கை அறைகள் கொண்ட பிளாட், 975 சதுர அடி முதல் 1,115 சதுர அடி கொண்டதாகவும், மூன்று படுக்கை அறைகள் கொண்ட பிளாட், 1,265 சதுர அடி முதல் 1,600 சதுர அடி கொண்டதாகவும் அமைக்கப்பட்டது.இக்கட்டிடத்தில், பல்நோக்கு அரங்கு, உடற்பயிற்சிக் கூடம், நீச்சல் குளம், சிறுவர் விளையாட்டு பூங்கா, ஆகியவை இடம்பெறும் என, கட்டிட நிறுவனம் அறிவித்துஇருந்தது.
தரைமட்டமான நம்பிக்கை
இதில் ‘தி பிலீப்' என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு கடந்த 28-ஆம் தேதி மாலை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 61 பேர் கட்டிட இடிபாடுகளிடையே சிக்கி இறந்தனர். காயமடைந்த 27 பேர் மீட்கப்பட்டனர்.
அதிநம்பிக்கையை தகர்க்க திட்டம்
இடிந்து விழுந்த கட்டிடத்தின் அருகே உள்ள மற்றொரு கட்டிடமான ‘தி பெய்த்'தின் உறுதித்தன்மை குறித்து சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு நாள்களாக ஆய்வு செய்தனர்.
அதுவும் பலவீனமானம்தான்
இந்த ஆய்வில் அந்தக் கட்டிடம் பலவீனமாக இருப்பதும், கட்டிடத்தில் தூண்கள் மற்றும் இரும்புக் கம்பிகள் தடிமன் குறைவாக இருப்பதும், தரமற்ற பொருள்களால் அந்த கட்டிடம் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
சீல் வைப்பு
இதனால் அந்தக் கட்டிடத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்தக் கட்டடம் இடிந்து விழுந்தால் பாதிப்பு ஏற்படும் எனக் கருதி முன்னெச்சரிக்கையாக சுமார் 50 மீட்டர் சுற்றளவுக்கு அபாயக் குறியீடுகள் பொறித்தனர். அடுத்த நடவடிக்கையாக அந்த கட்டிடத்தை இடிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
வெடி வைத்து தகர்க்க
இதில் நவீன முறையில் 11 மாடிக் கட்டிடத்தையும் ஒவ்வொரு மாடியாக வெடி வைத்து இடிப்பது குறித்து கட்டுமான நிபுணர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர். ஏற்கெனவே மும்பையில் இப்படிப்பட்ட கட்டிடம் எவ்வித பிரச்னையும் இன்றி வெடி வைத்து இடிக்கப்பட்டதால், இந்த கட்டிடத்தை இடித்து விடலாம் என்ற எண்ணம் அதிகாரிகளிடம் ஏற்பட்டுள்ளது.
விசாரணை ஆணையம்
இருப்பினும் தற்போது கட்டிட விபத்து குறித்து போலீஸ் மற்றும் ஒரு நபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிந்த பின்னரே, அந்தக் கட்டடத்தின் வளாகத்துக்குள் செல்ல முடியும் என்பதால் அது வரை கட்டிட இடிப்பு திட்டத்தை அதிகாரிகள் ஒத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.