வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணி தொடங்கியது... கலெக்டர், தாசில்தார் நேரில் ஆய்வு!
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்திற்கு இன்று காலையில் ஆட்சியர், வட்டாட்சியர் வருகை தந்துள்ளனர்.
Recommended Video
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்த நிலையில் இன்று காலையில் ஆட்சியர், வட்டாட்சியர் சுமார் 2 மணி நேரம் ஆய்வு நடத்திச் சென்றுள்ளனர். இவர்களோடு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் போயஸ் கார்டன் வந்திருந்தனர்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று ஆகஸ்ட் மாதத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அரசின் இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தங்களின் பூர்வீக சொத்து என்பதால் இதனை நினைவில்லமாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது தொடர்பாக ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் படி ஜெ. தீபா அரசு தலைமைச் செயலரை சந்தித்து போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்.
அதிகாரிகள் ஆய்வு
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மட்டுமே ஆய்வு செய்த நிலையில், இன்று காலையில் வேதா இல்லம் முன்பு 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வேதா இல்லத்திற்கு வந்தனர்.
வேதா இல்லம் கணக்கிடும் பணிகள்
இதனால் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான ஆய்வை நடத்தி இது குறித்து அரசிடம் அதிகாரிகள் குழு அறிக்கை அளிக்கும் என்று தெரிகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வருமான வரித்துறை அதிகாரிகளும் வேதா நிலையம் வந்திருந்ததாக தெரிகிறது. வேதா இல்லத்தை கணக்கிடும் பணிகள் தற்போது நடந்துள்ளது.
கணக்கிட்டு நில மதிப்புக்கு ஏற்ப இழப்பீடு
வேதா இல்லத்தை அரசுடைமையாக்கும் நடவடிக்கையில் அடுத்தகட்டமாக வீட்டை அளவிடும் பணிகள் தொடங்கியுள்ளதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போயஸ் இல்லத்திற்கு தீபா, தீபக் உரிமை கோருவதால் இல்லத்தை கணக்கிட்டு அதற்கு ஏற்ப இழப்பீடு அவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிகிறது.
நினைவில்லமாக்கும் பணிகள் தீவிரம்
தற்போது வரை வேதா இல்லம் சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் மற்றும் அவரது சகோதரி கட்டுப்பாட்டில் இருக்கிறது. வேதா இல்லத்திற்கு யார் உரிமையுள்ளவர்கள் என்ற வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில் அதிகாரிகள் வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை தீவிரமாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.