அஸ்வினி கொலையாளி அழகேசன், நர்ஸ் மீது ஆசிட் வீசிய ராஜா குண்டர் சட்டத்தில் கைது
சென்னையில் கல்லூரி மாணவி அஸ்வினியை கொலை செய்த அழகேசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை : சென்னையில் கடந்த மாதம் கல்லூரி மாணவி அஸ்வினியை கத்தியால் குத்தி கொலை செய்த அழகேசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதே போல மடிப்பாக்கத்தில் நர்ஸ் மீது ஆசிட் ஊற்றி எரித்து கொன்றவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி சென்னை மீனாட்சி கல்லூரியில் படித்து வந்த மதுரவாயலைச் சேர்ந்த மாணவி அஸ்வினி என்பவரை அழகேசன் என்கிற நபர் கத்தியால் குத்தி கொலை செய்தார். அவரை பொதுமக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், ஏற்கனவே பல முறை காதலிக்க வற்புறுத்தியும் அஸ்வினி தன்னை காதலிக்காததால், வெறுப்படைந்த அழகேசன் மாணவி அஸ்வினியை குத்திக் கொன்றதாக போலீஸாரிடம் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக முன்னதாகவே, மதுரவாயல் காவல்நிலையத்தில் புகார் அளித்தும் வெறும் எச்சரிக்கை செய்யப்பட்டு அழகேசன் விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே, இந்த கொலை நடந்திருப்பதாக தெரியவந்தது. இந்த சம்பவம் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அழகேசன் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் பெண்களை துன்புறுத்துபவர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடமாக அமையும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இது போல மடிப்பாக்கத்தில் பெண் நர்ஸ் மீது ஆசிட் ஊற்றிய ராஜா மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. மடிப்பாக்கம் அருகே வாணுவம்பேட்டையில் ஸ்ரீ பாலாஜி ரத்தப் பரிசோதனை மையம் என்ற தனியார் ரத்தப் பரிசோதனை நிலையம் உள்ளது. இதன் உரிமையாளர் ராஜா,40, இவரது ரத்தப் பரிசோதனை மையத்தில் யமுனா 33 நர்ஸ் ஆக பணியாற்றி வந்தார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு யமுனாவை ஆசிட் ஊற்றி கொலை செய்தார் ராஜா.