சென்னையில் கணினி ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த பிஎஸ்சி மாணவர் மர்ம சாவு-வீடியோ
சென்னை: தாம்பரம் அருகே ஆசிரியையுடன் வீட்டை விட்டு ஓடிய மாணவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டீச்சரின் கணவர் அவரை கொலை செய்திருக்ககூடும் என மாணவரின் குடும்பத்தார் குற்றம்சாட்டுகிறார்கள்.
தாம்பரம் அருகேயுள்ள, கவுரிவாக்கத்திலுள்ள ஒரு கல்லூரியில், பிஎஸ்சி 3ம் ஆண்டு படித்து வந்த மாணவர் அரவிந்த் குமார். இவருக்கும், கணினி ஆசிரியை கனிமொழிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மணமான கனிமொழியுடன், கடந்த 16ம் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டார் அரவிந்த் குமார்.
இதையடுத்து, ஆசிரியை மற்றும் மாணவர் ஆகிய இரு வீட்டு தரப்பும், சேலையூர் போலீசில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், 18ம் தேதி கனிமொழி மட்டும் வீடு திரும்பியுள்ளார். கடந்த ஞாயிறன்று, சிங்கபெருமாள் கோயில் ரயில் நிலையம் அருகே, அரவிந்த்குமார் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
இதுகுறித்து அரவிந்த்குமார் குடும்பத்தார் கூறுகையில், ஆசிரியையுடன் ஓடிய நாள் முதல் அரவிந்த் இறந்த நாள்வரையில் என்ன நடந்தது என்பதே புரியவில்லை. ஆசிரியை திரும்பி வந்ததும், அவரை விசாரிக்குமாறும், அரவிந்த் திரும்பும்வரை அவரை வெளியே விடக்கூடாது என்றும் போலீசில் நாங்கள் கேட்டுக்கொண்டோம். ஆனால் போலீசாரோ, ஆசிரியையை வெளியே விட்டால்தான், அரவிந்த் அவருக்கு போன் செய்வார், அவரது செல்போன் எண்ணை வைத்து பிடித்துவிடலாம் என்று கூறி மெத்தனமாக விட்டுவிட்டனர் என்று குற்றம்சாட்டினர்.
ஆசிரியையின் கணவர், ஏற்கனவே அரவிந்த்தை மிரட்டியிருந்ததாகவும் குடும்பத்தார் கூறுகிறார்கள். எனவே இது கொலையா, விபத்தா என்பதில் குழப்பம் நீடிக்கிறது. இச்சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.